சந்தானம் போல் கதாநாயகன் அமைந்தால் மனதில் அருவிபோல் நகைச்சுவைக் காட்சிகள் பளிச்சிடும் என்கிறார் இயக்குநர் ஆனந்த் நாராயண்.
தற்போது இவரது இயக்கத்தில்தான் நடித்து வருகிறார் சந்தானம். ‘இங்க நான்தான் கிங்கு’ எனப் படத்துக்குத் தலைப்பு வைத்துள்ளனர்.
“சந்தானத்தைப் பொறுத்தவரை இயக்குநர் கேட்கும் அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுப்பார். கதை, திரைக்கதை அமைப்பதிலும் அவர் கைதேர்ந்தவர்.
“ஒரு நகைச்சுவையில் எந்தெந்த பகுதிகள், வசனங்கள் மக்களால் ரசிக்கப்படும் என்பதை நன்கு அறிந்தவர். அதனால்தான் அவருடன் வேலை பார்க்கும்போது சல்லடைபோட்டு அலசி எடுத்தது போன்ற நகைச்சுவைக் காட்சிகள் தன்னால் உருவாகும் என்று அடிக்கடி சொல்வேன்.
“இது நகைச்சுவைப் படம் என்பதால் அனைவரும் உற்சாகமாக வேலை பார்த்தோம். அதற்கான சூழலையும்கூட சந்தானம் ஏற்படுத்திக் கொடுத்தார்.
“அதனால்தான் படப்பிடிப்பைத் தொடங்கிய வேகத்தில் முடித்துவிட்டோம்,” என்று முகம் எல்லாம் உற்சாகமாகவும் புன்னகையுடனும் விவரிக்கிறார் இயக்குநர் ஆனந்த் நாராயண்.
இவர் இதற்கு முன்பு விஜய் ஆண்டனி நடிப்பில் ‘இந்தியா பாகிஸ்தான்’ என்ற படத்தை இயக்கியவர். இந்தப்படம்தான் சந்தானத்தை இயக்கும் வாய்ப்பை தமக்கு பெற்றுக்கொடுத்ததாகச் சொல்கிறார்.
“தயாரிப்பாளர் அன்பு செழியன் ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தைப் பார்த்துள்ளார். அவருக்கு படம் பிடித்துப்போகவே, தனது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு அளித்துள்ளார்.
“எனது முதல் படத்திலும் சந்தானம் நாயகனாக அமைய வேண்டும் என விரும்பினேன். எனக்கும் நகைச்சுவை கதையம்சம் கொண்ட படத்தை இயக்குவதுதான் விருப்பமாக இருந்தது. அத்தகைய வாய்ப்பு எனது இரண்டாவது படத்தில் அமைந்துள்ளது,” என்கிறார் ஆனந்த் நாராயண்.
‘இங்க நான்தான் கிங்கு’ படத்தில் புதுவிதமான, புத்துணர்ச்சி அளிக்கும் நகைச்சுவையை எதிர்பார்க்கலாம் என்று சொல்பவர், சந்தானத்தின் நகைச்சுவை புதிய உயரத்தை எட்டியுள்ளது என்கிறார்.
“சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் சந்தானம். அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கண்டு பொதுமக்கள் அவர்தான் ‘கிங்’ என்று சொல்லவைக்கும். சந்தானம் என்ன செய்தார், ஏன் செய்தார் என்பதுதான் கதை.
“பல ஆண்டுகளாக நடித்து வருகிறார் சந்தானம். ஆனால் இன்னமும்கூட பக்கத்துவீட்டு பையன் போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறார். இதுதான் இவருடைய பலம். இப்போது என் படத்தின் கதைக்கும் இந்த அம்சம் பலமாக மாறியுள்ளது.
“பிரியாலயா இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். அவர் பரதநாட்டியத்தை முறைப்படி பயின்றவர். இதில் நடனத்திலும் அசத்தியுள்ளார்.
“தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, காலஞ்சென்ற மனோபாலா உள்ளிட்டோர் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
“டி.இமான் இசையில் பாடல்கள் அருமையாக உருவாகி உள்ளன. அவர் சந்தானம் படத்துக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.
“முழு படப்பிடிப்பும் சென்னை, அதன் சுற்று வட்டாரங்களில்தான் நடைபெற்றது,” என்கிறார் ஆனந்த் நாராயண்.