விஜய் நடித்திருந்த ‘கில்லி’ திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது. அதனால் படத்தின் வசூல் பன்மடங்கானது என்று திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கில்லி’.
இப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, ரசிகர்களால் இன்று வரை வெகுவாகக் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.
‘கில்லி’ திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி இப்படத்தை மீண்டும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ‘கில்லி’ மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதுபற்றி திரிஷா வெளியிட்ட பதிவில், “கில்லி’ அசுர வெற்றி அதிர்வுகளுடன் மீண்டும் பொழுது விடிந்துள்ளது. 2004ல் தொடங்கிய பயணம் 2024ல் முழு வட்டம் நிறைவடைந்து மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து நிற்கிறது,’’ என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.