ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அமரன்’.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.
சாய் பல்லவி நாயகியாக நடிக்க, தமிழகத்தைச் சார்ந்த ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.
இந்நிலையில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த முகுந்த் வரதராஜனின் பத்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமையன்று அவரது நினைவிடத்தில் ‘அமரன்’ படக்குழுவினர் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தி உள்ளனர்.
சிவகார்த்திகேயன் ‘அமரன்’ படத்தில் தாம் பயன்படுத்திய ராணுவ உடையை அணிந்து, மேஜர் முகுந்தனின் நினைவிடத்துக்குச் சென்று சல்யூட் அடித்தபடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நமது தேசியக்கொடி காற்று அசைவதால் பறப்பதில்லை. அதனைப் பாதுகாக்க உயிரைவிட்ட அனைத்து வீரர்களின் இறுதி மூச்சில்தான் பறக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனின் இந்த நெகிழ்ச்சிப் பதிவை அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். ‘அமரன்’ திரைப்படம் விரைவில் திரைகாண உள்ளது எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.