ராகவா லாரன்ஸ் துவங்க இருக்கும் ‘மே 1 முதல் மாற்றம்’ என்ற அறக்கட்டளையில் தானும் இணைந்து உள்ளதாகக் கூறியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
ராகவா லாரன்ஸ் நடிக்கத் துவங்கியது முதல் திரைப்படத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பல வகையில் குரல் கொடுத்து வந்தார். அதை வெறும் குரலோடு நிறுத்திவிடாமல், தனக்குக் கிடைக்கும் பணத்தில் மிகப்பெரிய அளவில் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தொடர்ச்சியாக உதவி செய்து வருகிறார்.
பல அறக்கட்டளைகள் மூலம் உதவிகளை செய்து வரும் ராகவா லாரன்ஸ் தற்பொழுது, ‘மே 1 முதல் மாற்றம்’ என்ற தலைப்பில் ஒரு புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளார்.
அதன்படி தன்னால் விதையிடப்பட்டு இன்று விருட்சமாக வளர்ந்திருக்கும் பல மாணவ மாணவியர்கள், இனி அவர்கள் ஈட்டும் பணத்திலிருந்து தங்களால் இயன்ற உதவியை பிறருக்கு செய்ய இருக்கின்றனர்.
அதுகுறித்த ஒரு அறிவிப்பை கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அந்தப் பதிவைப் பார்த்த எஸ்.ஜே.சூர்யா, “மாஸ்டர் ராகவா லாரன்ஸ் எனக்கு ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தில் கிடைத்த ஒரு சிறந்த நண்பராக மாறியிருக்கிறார். அவர் சொல்லும் அனைத்து விஷயத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். ‘மே 1 முதல் மாற்றம்’ நிகழ்வில் அவரோடு இணைந்து அவர் கைகாட்டும் நபர்களுக்கு உதவி செய்ய நான் ஆவலோடு காத்திருக்கிறேன்,” என்று பேசி காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்தக் காணொளியை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.