கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்காசிய தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் நூலை இந்திய மரபுடைமை நிலையமும் கொள்கை ஆய்வுக் கழகமும் இணைந்து பிரசுரித்துள்ளன.
‘ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்’ என்ற தலைப்பு கொண்ட இந்நூல், இணையம் வழி நடந்த மாநாட்டில் மே 1ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற மாநாட்டுக்கும் நூல் வெளியீட்டுக்கும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு மற்றும் வளர்தமிழ் இயக்கம் ஆதரவளித்திருந்தன.
இந்நூல் முதன்முதலில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டது. 27 இயல்கள் கொண்டு இரண்டு தொகுதிகளாக வெளியீடு கண்டது.
அந்த 27ல், 18 இயல்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரே தொகுதியாகத் தமிழில் உருவாக்கம் கண்டுள்ளது.
492 பக்கங்கள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க இந்நூலுக்கு திரு அருண் மகிழ்நன், செல்வி நளினா கோபால் ஆகியோர் தொகுப்பாசிரியர்கள்.
“சிங்கப்பூர் தமிழர்களின் வரலாற்றில், பிற தென்கழக்காசியத் தமிழர்களின் வரலாற்றில், சிங்கப்பூரின் தமிழ் நூல் வெளியீட்டு வரலாற்றில், இந்திய மரபுடைமை நிலையத்தின் வரலாற்றில், கொள்கை ஆய்வுக் கழகத்தின் வரலாற்றில் இது போன்ற நூல் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை,” என்றார் கொள்கை ஆய்வுக் கழகத்தின் சிறப்பு ஆய்வு ஆலோசகரான திரு அருண் மகிழ்நன், 75.
அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியைக் கொண்டுள்ள சிங்கப்பூரில் வெளியிடப்படும் தமிழ் நூல்கள் அடையாளப்பூர்வ முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்துடனும் தென்கிழக்காசியாவின் புலம்பெயர் தமிழருடனும் நேரடியாகவும் நெருக்கமாகவும் தொடர்புகொண்ட இந்த நூலைத் தமிழில் வாசிப்பது தமிழ் அறிந்தவர்களுக்கு ஓர் ஆத்மார்த்தமான அனுபவமாக அமையும் என்றும் சுட்டினார் திரு அருண்.
அத்துடன் கல்வியாளர்களுக்கு மட்டுமே பயனளிக்காமல் பொதுமக்களுக்கும் உகந்த நூலாக உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டது என்றார் அவர்.
“சிங்கப்பூர் இந்தியச் சமூகங்களில் ஆகப் பெரிதான தமிழ்ச் சமூகத்தின் அம்சங்களை ஆழமாகவும் துல்லியமாகவும் ஆராயும் நோக்கம் கொண்டது இந்த நூல். பண்டைக் காலத்தில் தென்கிழக்காசியாவுடன் தமிழர் கொண்டிருந்த தொடர்புகள், குடியேற்றம், தாக்கம் ஆகியவற்றின் தடயங்களை இந்நூல் தேடிச் செல்கிறது. சிங்கப்பூரில் குறுகிய காலம் தங்கிச் சென்றவர்களாக மட்டும் இருந்து வந்த தமிழர் எங்ஙனம் காலப்போக்கில் இங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்கி இந்த நாட்டின் குடிமக்களாகினர் என்னும் வரலாறும் இந்த நூலின் கருப்பொருளாக விளங்குகிறது,” என்று குறிப்பிட்டார் அருண்.
சிங்கப்பூர் உட்பட இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தோனீசியா, தாய்லாந்து, அமெரிக்கா எனப் பல நாடுகளைச் சேர்ந்த 20 ஆசிரியர்களின் பங்களிப்பில் நூலின் கட்டுரைகள் அமைந்துள்ளன.
இவர்கள் அகழ்வாய்வாளர் (archaeologist), வரலாற்றாய்வாளர் (historian), கல்வெட்டு பொறிப்பியல் நிபுணர் (epigraphist), கலை வரலாற்றாய்வாளர் (art historian) என்று பல துறைகளிலும் முறையான கல்வியையும் பயிற்சியையும் பெற்றவர்கள் என்று விளக்கினார் திரு அருண்.
“அவர்கள் படைத்திருக்கும் கட்டுரைகள் விரிவானவை மட்டுமின்றி அவரவர் துறைகளில் கிடைத்திருக்கும் ஆக அண்மைய ஆதாரங்கள், புரிதல்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியவை. தென்கிழக்காசியாவில் தமிழர் வரலாற்றைக் குறித்து இவ்வளவு ஆதாரங்களையும் ஆய்வுகளையும் கொண்ட அரிதான நூல்களுள் ஒன்று இந்த நூல்.
“தென்கிழக்காசியாவில் தமிழர் குறித்த தகவல்களை அதிகமாக அளிப்பதோடு மட்டுமல்லாமல் தமிழர் வரலாற்றின் பெரும் இடைவெளிகளை ஓரளவு குறைப்பதையும் இந்நூல் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று மேலும் விளக்கினார் திரு அருண்.
தமிழாக்கம் செய்யும் முயற்சி கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எடுத்தது என்றார் இந்திய மரபுடைமை நிலையத்தில் காப்பாளராக பணிபுரியும் செல்வி நளினா, 37.
“மொழிபெயர்ப்பு வல்லுநர்களை அணுகி இந்த தமிழ் நூலை உருவாக்கியுள்ளோம். சிங்கப்பூர், தென்கிழக்காசிய தமிழர்களுக்கும் கல்வி ஆய்வாளர்களுக்கும் இந்நூல் பயனளிக்கும்,” என்றார் நளினா.
நூலின் மின்னலக்க வடிவம் தற்போது இணையம் வழி $42.80 என்ற விலையில் கிடைக்கும்.
நூலின் அச்சு வடிவத்தை வாங்க விரும்புவோர், இம்மாதம் 28ஆம் தேதிக்குப் பிறகு இணையம் மூலமாகவோ இந்திய மரபுடைமை நிலையத்திற்கு நேரடியாகச் சென்றோ வாங்கலாம்.
நூலை வாங்க விரும்புவோர் இந்த இணையப்பக்கத்தை நாடலாம்: readabook.store/collections/national-heritage-board/products/9789811458200
இந்திய ஆட்சிப்பணி அலுவலர் மற்றும் தற்போதைய தமிழக அரசின் தொல்லியல் ஆணையர் திரு த. உதயசந்திரனின் கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த உரை, இணைய மாநாட்டின் சிறப்பு அங்கமாக அமைந்தது.
முழு நிகழ்ச்சியைக் காண விரும்புவோர் இந்த இணைப்பை நாடலாம்: youtu.be/fEEBgcS7LX0