ஆ. விஷ்ணு வர்தினி
கலையும் இலக்கியமும் வரலாறும் சங்கமிக்கும் இடமாக உருவெடுத்துள்ள சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் 'தமிழ்ச் சோலை' தமிழ் வாசகர்களுக்கு ஒரு புதையல். புதினம், புதினம் அல்லாதவை, பழங்காலப் படைப்புகள், நவீன தமிழ் ஆக்கங்கள் என ஏராளமான வளங்களைக் கொண்டுள்ளது உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்ட 'தமிழ்ச் சோலை'.
தமிழ்மொழி வாசகர்களுக்கான மையமாக விளங்கிய அங் மோ கியோ நூலகத்தைக் காட்டிலும் அதிக இடவசதியோடு, அணுகுவதற்கு எளிதாக அமைந்துள்ளது உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தின் இந்தத் தமிழ்ப் பிரிவு.
இதனால், தமிழர்கள் அதிக அளவில் தமிழ்ச் சோலைக்கு வருகைபுரிவர் என்றும் அவர்கள் இவ்வளங்களை பெரிதும் பயன்படுத்துவர் என்றும் தேசிய நூலக வாரியம் நம்புவதாகத் தெரிவித்தார் தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர் அழகிய பாண்டியன்.
"தமிழ்ச் சோலை மக்களிடையே தமிழ்ப் புழக்கத்தை மேலும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்," என்றார் திரு பாண்டியன்.
வாசகர்கள் அதிகமுள்ள இடம் தேடிச் சென்று விரிவாக்கம் கண்டுள்ள தமிழ் நூலக மையம், தமிழர்களுக்கான அதிகமான வளங்கள், வசதிகளோடு, பிற மொழியினருக்கும் தமிழ் குறித்த கூடுதல் வளங்களைக் கொண்டு இருக்கிறது.
தமிழ்மொழி வாசிப்பு குறித்துப் பேசிய நூலகர் ரேணு சிவா, "கொவிட்-19 சூழலில் தமிழ் நூல் வாசிப்பு குறைந்தது. ஆனால், மின்னூல்கள் தொடர்ந்து வாசிப்புக்குக் கைகொடுத்து வந்தன. எங்களது மின்னூல் தொகுப்பை விரிவுபடுத்தி உள்ளோம்," என்றார்.
தமிழ்ச் சோலையில் இருக்கக்கூடிய மின்னிலக்கப் பலகைகளில் தமிழ் மின்னூல்களையும் மின்சஞ்சிகைகளையும் பற்றி அறிந்துகொள்ளலாம். அவற்றின் முன்னோட்டங்களைப் படித்து, நூலகக் கைப்பேசிச் செயலியைக் கொண்டு இரவல் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாசிப்பு இன்பத்தை வாசகர்களுக்கு அளிக்கும் வண்ணம் முழுமையானதொரு வாசிப்பு அனுபவத்தைத் தரும் இடமாக தமிழ்ச் சோலை அமைந்துள்ளதாகக் கூறினார் மற்றொரு நூலகரான திருமதி நிர்மலா நாராயணசாமி.
தமிழ்மொழி வளங்களை ஒருங்கிணைப்பதோடு, வாசிப்பு குறித்த நிகழ்வுகளுக்கும் இது ஆதரவளிக்கும். வாசிப்பு வட்டங்கள், மொழிபெயர்ப்பு சார்ந்த நிகழ்வுகள், எழுத்தாளர் சந்திப்புகள் போன்ற நிகழ்ச்சிகள் வரும் நாள்களில் இடம்பெறும். நேரடி நிகழ்வுகளுக்கு முன்பதிவு அவசியம்.
மேல் விவரங்கள் அறிய: https://go.gov.sg/tamilcholaipro grammes எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.
'குரல்கள்' கண்காட்சி
தொடக்க காலம் முதல் இக்காலம் வரையிலான புலம்பெயர் தமிழர்களின் இலக்கியங்கள் 'குரல்கள்' கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 1800களில் சிங்கப்பூர்த் தமிழர்களால் இயற்றப்பட்ட கவிதைகள், பக்திப் பாடல்கள் முதலியவற்றில் இருந்து சில பக்கங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப் போருக்குமுன் சமூகப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகைகளின் தொடக்க கால ஆவணங்களையும் சமூக எழுச்சி நூல்களையும் இங்கு காணலாம்.
'அடுக்குவீட்டு அண்ணாசாமி' போன்ற, 2000களில் எழுதப்பட்டு தேசிய அடையாளத்தின் வளர்ச்சிக்கு உரமிட்ட புகழ்பெற்ற இலக்கியங்களை இக்கண்காட்சி நினைவுகூர்கிறது.
கடைசிப் பகுதியாக, தற்போதைய காலகட்டத்தில் உலகமயமாக்கலின் தாக்கங்களோடு காணப்படும் நவீன இலக்கிய நூல்களும் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. இந்நூல்களும் தமிழ்ச் சோலையில் இடம்பெறுகின்றன.
திருக்குறள் சங்கமம்
அரபு, கன்னடம், சீனம் உட்பட 17 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பழங்காலத் தமிழ் எழுதப்பட்டுள்ள பனை ஓலையும் இடம்பெற்றுள்ளது இதன் சிறப்பம்சம். பூட்டு தயாரித்தல், பானை வனைதல், சிற்பக்கலை, நடனக்கலை என தமிழர் பண்பாட்டின் பல்வேறு கூறுகளைக் கொண்டுள்ளது இக்காட்சிப்பேழை.
சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்
உலக அளவில் முதல் முயற்சியாக உருவெடுத்துள்ளது 'சிங்கப்பூர்த் தமிழ்க் கலைக்களஞ்சியம்'. புலம்பெயர் தமிழர்களுக்கென தனித்ததொரு மின்னிலக்கக் கலைக்களஞ்சியம் உருவாக்கப்படுவது வேறெந்த நாட்டிலும் சிங்கப்பூரிலும் இதுவரை எடுக்கப்படாத முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முயற்சி குறித்து விவரித்த சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் திரு அருண் மகிழ்நன், "சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் இங்கு முதன்முறையாக உருவாக்கப்படுகிறது. வெளிநாட்டவருக்கும் பயனளிக்கும் வகையில் இக்கலைக்களஞ்சியம் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் உருவாக்கப்படும்," என்றார். தமிழ் நூலக ஆலோசனைக் குழுவின் தலைவருமான அவர், தேசிய நூலக வாரியத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இம்முயற்சி சாத்தியமாகின்றது என்றும் கூறினார்.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் இணைந்து மேற்கொள்ளவுள்ள இத்திட்டத்திற்கு 2005ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'சிங்கப்பூர் இன்ஃபோபீடியா' ஒரு முக்கியத் தாக்கம்.
சமூக முயற்சியாக முன்னெடுக்கப்படும் இத்திட்டம், இக்காலத்திலும் வருங்காலத்திலும் சிங்கப்பூரின் முக்கிய வளங்களாகத் திகழக்கூடும் எனக் குறிப்பிட்டார் திரு அருண் மகிழ்நன்.
சிங்கப்பூரின் தமிழ்ப் பண்பாட்டைத் தமிழர்களும் தமிழர் அல்லாதோரும் புரிந்துகொள்வதற்கும் பகிர்ந்துகொள்வதற்கும் ஏதுவான முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் 2019ஆம் ஆண்டில் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் தொடங்கப்பட்டது.