ஜூன் மாத விடுமுறையை முன்னிட்டு தமிழ் மொழியையும் கலைகளையும் கொண்டாடும் வண்ணம் ‘குட்மன் ஓப்பன் ஹவுஸ்’ விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாளை ஒட்டிய நிகழ்வும் ராமாயண கதாபாத்திரமான சீதாவின் ஓவியங்களை மையப்படுத்திய நடனக் காணொளிப் படைப்பும் இடம்பெற்றன. ஜூன் 24ஆம் தேதி குட்மன் கலை நிலையத்தில் காலை முதல் மாலை வரை நடைபெற்ற நிகழ்வுகளில் பலரும் தங்களின் குடும்பத்தாருடன் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்ற ‘கவியரசு கண்ணதாசனின் கவிதையும் கானமும்’ நிகழ்வில் இரு அங்கங்கள் இடம்பெற்றன. முதலில் நடந்த இளையர்களுக்கான கவிதை வாசித்தல் அங்கத்தில் ஆறு மாணவர்கள் தங்கள் மனம் கவர்ந்த கண்ணதாசன் கவிதைகளை வாசித்ததுடன் அதற்கான விளக்கத்தையும் கூறினர்.
இன்னோர் அங்கமாக கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களையொட்டிய ‘காஹுட்’ புதிர்ப் போட்டியும் இந்நிகழ்வில் இடம்பெற்றது. இப்போட்டியின் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு $100, $75, $50 ரொக்கப்பரிசுகளும் ஊக்கப் பரிசு பெற்ற மூவருக்குத் தலா $30ம் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவி கிருஷ்மிதா ஷிவ்ராம், 19, “இந்நிகழ்ச்சிக்காகவே கண்ணதாசன் பாடல்களையும் கவிதைகளையும் அதிகம் படித்தேன். ஆழமான கருத்துகளை எளிமையான வரிகளில் கவிஞர் எழுதியுள்ள விதம் மிகவும் சுவாரசியமாக இருந்தது,“ என்று கூறினார்.
இவ்விழாவின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற இந்திய ஓவியரான ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் ‘சீதா’ எனும் தலைப்பில் நடனப் பதிப்பாக காட்சிப்படுத்தப்பட்டன. ராமாயணக் கதாப்பாத்திரமான சீதாவை மையப்படுத்திய ஐந்து ஓவியங்களின் கதைகள் ‘அப்சராஸ் ஆர்ட்ஸ்’ கலை நிறுவனத்தின் குழுவினரால் நடனக் காணொளியாகப் படைக்கப்பட்டிருந்தது.
கொவிட்-19 காலத்தில் ‘சிஜிஐ’ தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் காணொளிப் படைப்பு, நிகழ்ச்சி நாளன்று மூன்று காட்சிகளாக படைக்கப்பட்டது.
நரம்பியல் அறிவியல்சார் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவி பிரியா ரமேஷ், 25, இதன் தொடர்பில், “ஓவியங்களுக்கு நடனம் வாயிலாக உயிரூட்டியுள்ளனர். ஓவியங்களின் கதாபாத்திரங்கள் அதன் சூழலோடு நேரில் வந்து உரையாடியதைப் போன்ற அனுபவம் புதிதாக இருந்தது,“ என்று கூறினார்.
“இதுவரை இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்தப் படைப்பு கலை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஓவியம், நடனம் ஆகிய இரு வேறு கலை அம்சங்களின் கூட்டாக உருவாக்கப்பட்ட இந்த முயற்சியின் வெற்றி எங்களுக்கு அதிக ஊக்கத்தை அளித்துள்ளது,” என்று கூறினார் ‘அப்சராஸ் ஆர்ட்ஸ்’ கலை நிறுவனத்தின் கலை இயக்குநர் திரு அரவிந்த் குமாரசாமி, 56.
இந்தப் படைப்பில் நடன இயக்குநராகவும் ஆடை வடிவமைப்பாளராகவும் நாட்டிய கலைஞராகவும் பணியாற்றிய மோகனபிரியன் தவராஜா, 34, “மிகுந்த சவால்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பு மூன்றாண்டுகளுக்குப் பிறகும் பெறும் வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இளையர்களிடம் கலையைக் கொண்டு செல்லும் நோக்கில் தொடர்ந்து தொழில்நுட்பத்தின் உதவியுடன் புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடுவோம்,“ என்று கூறினார்.