சிங்கப்பூர் மூத்த ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற 53 வயது சந்திரன் நந்தகுமார், கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூர் இந்தியர் சங்கம், மக்கள் கழகம், இந்து அறக்கட்டளை வாரியத்தின்கீழ் செயல்படும் கோயில்கள், சாங்கி சீமெய் அக்கம்பக்கக் குழு உள்ளிட்ட பல அமைப்புகளில் சமூக சேவையாற்றி வருகிறார்.
தற்போது சாங்கி சீமெய் அக்கம்பக்கக் குழுவின் தலைவராகவும் இவர் பொறுப்பு வகிக்கிறார்.
திரு நந்தகுமாரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, இவ்வாண்டின் தேசிய தின விருதுப் பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடமிருந்து பொதுப் பணி பதக்கத்தை இவர் பெற்றுக்கொண்டார்.
“தொண்டூழியத்தில் ஈடுபடுவது மனநிறைவு தருகிறது. என் மகளுக்கு 15 வயதானபோது முதல் முறையாக அவரை முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவர்கள் படும் துன்பங்களைப் பார்த்து இன்று 25 வயதாகும் என் மகளும் தொண்டூழியத்தில் முழுவீச்சில் ஈடுபடுகிறார்,” என்றார் நந்தா.
சமூகத்துக்கு முடிந்த அளவில் சேவை செய்து உதவ வேண்டும் என்ற இலக்குடன் இருக்கும் திரு நந்தா, பிள்ளைகள் தீவிரமாகத் தொண்டூழியத்தில் இறங்க பெற்றோர்கள்தான் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்று சொன்னார்.
இளையர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் திரு நந்தா, “இக்காலத்து இளையர்கள் தொண்டு மூலம் அவர்களின் வாழ்வில் பல நன்மைகளைப் பெறலாம் என்பதை உணர வேண்டும். அது வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்,” என்று சொன்னார்.
திரு நந்தாவுக்கு தொண்டூழியம் மீது ஆர்வம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக கிரிக்கெட் விளையாட்டு இருந்தது.
தமது 12வது வயதில் கிரிக்கெட் மட்டையைப் பிடிக்க தொடங்கிய இவர், 40 வயது வரை அதில் ஈடுபாடு காட்டினார். எவ்விதப் பயிற்சிகளையும் மேற்கொள்ளாமல் நண்பர்களோடு மட்டும் அதை விளையாடி வந்த இவர், கிரிக்கெட் தனக்கு சகிப்புத்தன்மையையும் மனவலிமையையும் கற்றுக்கொடுத்ததாகப் பகிர்ந்துகொண்டார்.
கிரிக்கெட் விளையாட்டில் தலைமைத்துவப் பொறுப்புகளில் இருந்த திரு நந்தா, அந்த விளையாட்டு வெவ்வேறு மனிதர்களையும் இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது என்கிறார்.
தொண்டூழியத்தில் தலைமைத்துவப் பொறுப்பு வகித்துவரும் திரு நந்தாவுக்கு கிரிக்கெட் விளையாட்டு அதற்கான திறன்களைக் கற்றுத் தந்துள்ளது.