சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் இயங்கும் விண்வெளித் துறையைச் சேர்ந்த இரு தனியார் நிறுவனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் புகழ்பெற்ற இந்திய விண்வெளி அறிவியல் வல்லுநர் மயில்சாமி அண்ணாதுரை முன்னிலையில் திங்கட்கிழமை (நவம்பர் 6) சிங்கப்பூரில் கையெழுத்தானது.
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் முன்னாள் இயக்குநரும் மூத்த அறிவியலாளருமான திரு மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 1, 2, மங்கள்யான் ஆகிய விண்கலன்களைப் பாய்ச்சிய பெருமையைக் கொண்டுள்ளவர்.
தமிழ்நாட்டு நிறுவனமான ‘ஸ்பேஸ் சோன் இந்தியா’ முன்னெடுப்பில் ஏவப்படும் ராக்கெட், சிங்கப்பூரின் ‘இக்வடோரியல் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் ஏவும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும்.
உலகிலேயே முதன்முறையாக எந்த இடத்திலிருந்தும் ஏவக்கூடிய தளத்தின் (mobile launch) மூலம் கலவை உந்துகணை (Hybrid Rocket) விண்ணில் செலுத்தப்படும் திட்டத்தை இரு நிறுவனங்களும் தீட்டியுள்ளன. அத்திட்டத்திற்கு ‘மிஷன் ரூமி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மதியுரைஞர் திரு மயில்சாமி அண்ணாதுரை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, உந்துகணையைச் செலுத்த நிலையான ஏவுதளம் தேவைப்படும். ஆனால், இந்த ஒப்பந்தம் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் செலுத்தக்கூடிய அளவிலான தளத்திலிருந்து, குறைந்த செலவில் உருவாக்கப்படும் கலவை உந்துகணையே பயன்படுத்தப்படும்.
துவாஸ் வட்டாரத்திலுள்ள ‘இக்வடோரியல் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
“விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களும் முன்னேறிவரும் சூழலில் இது ஒரு சிறப்பான முன்னெடுப்பு. இக்கால இளையர்கள் விண்வெளித் துறையில் பங்கெடுத்து சாதிக்க இது போன்ற முயற்சிகள் அடித்தளமாக அமையும்,“ என்று கூறினார் திரு அண்ணாதுரை.
“இம்முறை மூலம் குறைந்த செலவில் கலவை உந்துகணையை விண்ணில் செலுத்த முடியும் என்பதை நிரூபிக்கவே முனைகிறோம். பொதுவாக 30 கோடி ரூபாய் வரை செலவாகும் இந்த ஏவுதலுக்கு இம்முறை மூலம் அதிகபட்சமாக 10 கோடி ரூபாயே செலவாகும்,” என்று கூறினார் ‘ஸ்பேஸ் சோன் இந்தியா’ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு ஆனந்த் மேகலிங்கம், 29.
இந்த ‘ரூமி 1’ உந்துகணையை சென்னையின் இசிஆர் பகுதியில் 2024 ஆகஸ்ட் 24ஆம் தேதி விண்ணில் ஏவத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
‘ரூமி 1’ உந்துகணையை ‘இக்வடோரியல் ஸ்பேஸ்’ நிறுவனம் சிங்கப்பூரிலேயே தயாரிக்கவுள்ளது. 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 2020ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து விண்ணிற்கு 1 கி.மீ. தூரமும் 2022ஆம் ஆண்டு சென்னையிலிருந்து விண்ணிற்கு 3 கி.மீ. தூரமும் செல்லக்கூடிய உந்துகணைகளைத் தயாரித்துள்ளது.
“‘ரூமி 1’ உந்துகணை விண்ணில் 45 கி.மீ வரை செல்லும் வகையில் உருவாக்கி வருகிறோம். இதற்கான பாவனை உந்துகணை ஏவுதலை ஆஸ்திரேலியாவில் சோதித்துப் பார்க்கத் திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறினார் ‘இக்வடோரியல் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை இயக்க அதிகாரியுமான திரு பிரவீன் கணபதிபெருமாள், 31.