இலக்கை நோக்கிப் பாடுபட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு மக்கள் கவிஞர் மன்றத்தின் வருடாந்திர உழைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மே தின மாலை, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2024ல் இவ்விருதைப் பெற்றார் திரு சின்னதுரை சதீஷ், 32.
சிறப்பு விருந்தினர் எம்இஎஸ் குழும நிறுவனர் திரு முகமது அப்துல் ஜலீல் விருதை வழங்கினார்.
இந்தியாவில் இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்று, 2013ல் சிங்கப்பூரில் கட்டுமானத் தொழிலாளியாகத் தொடங்கிய சதீஷ், தொடர்ச்சியான கற்றல்மூலம் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் படிப்படியாக உயர்ந்தார்.
2021ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கத்திடமிருந்து சிறந்த மேற்பார்வையாளருக்கான வெள்ளி விருதைப் பெற்றார்.
2023ல் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்தில் நிபுணத்துவப் பட்டயம் முடித்து, மனிதவள அமைச்சில் பாதுகாப்பு அதிகாரியாகப் பதிவானார்.
தனக்குக் கிட்டிய வாய்ப்புகளைப் பிறருக்கும் வழங்க, தன் ஊரில் 2017ல் முன்னாள் மாணவர் சங்கம் உருவாக முன்னோடியாகவும் இருந்தார்.
2016ல் பட்டுக்கோட்டையின் 57வது நினைவு நாளையொட்டி மக்கள் கவிஞர் மன்றம் தமிழ் முரசுடன் இணைந்து நடத்திய வேலையிடப் பாதுகாப்பு கட்டுரைப் போட்டியிலும் பரிசு பெற்றார்.
“கண்ணீருடன் தொடங்கி, நான் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் சவால்களை எதிர்கொண்டேன். எனது இலக்கை அடைய உறுதுணையாக இருந்த சக ஊழியர்களுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் நன்றி,” என கூறினார் திரு சதீஷ்.
நிகழ்ச்சியில் இந்திய நாட்டுப்புறப் பாடகர் கரிசல் குயில் கிருஷ்ணசாமி, பட்டுக்கோட்டையின் பாடல்களையும் அவரைப் பற்றி எழுதப்பட்ட பாடல்களையும் கச்சேரியாகப் படைத்தார்.
“பட்டுக்கோட்டை எளிய சொற்களில் வலிமையான கருத்துகளை மக்கள் ரசிக்கும்படி எழுதியதே அவரது மிகப் பெரிய சிறப்பு,” என்றார் திரு கிருஷ்ணசாமி.
‘சின்னப் பயலே’, ‘உன்னைக் கண்டு நானாட’ போன்ற பட்டுக்கோட்டையின் பாடல்களை வீணையிலும் வாசித்தார் கம்பன் இளங்கோவன்.
நிகழ்ச்சியில் மக்கள் கவிஞர் மன்ற ‘மக்கள் கவி மலர் 2024’ வெளியிடப்பட்டது.
‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ குழுவின் நடனமணிகள் ஐந்து நடனங்களையும் படைத்தனர். மார்ச் இறுதியில் நடைபெற்ற பட்டுக்கோட்டை பாடல் போட்டிகளின் வெற்றியாளர்கள் மூவர் மேடையேறிப் பாடினர்.
இறுதி அங்கமாகப் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தொடக்கநிலை ஒன்றைச் சேர்ந்த புகழ் ஜெய்த்திரன், தொடக்கநிலை இரண்டாம், மூன்றாம் பிரிவில் சரசிஜா நெடுமாறன், தொடக்கநிலை நான்கு முதல் ஆறு வரையில் சஹானா நவிந்திரன், உயர்நிலை ஒன்று முதல் நான்கு வரை சுந்தரவடிவேலு விஜய், பெரியவர்ப் பிரிவில் பிரியதர்ஷினி நீலநாதன் ஆகியோர் வென்றனர்.