கொவிட்-19 தகவல் பகிர்வு தொடர்பில் சீனாவுக்கு வலியுறுத்து
உலக சுகாதார நிறுவனம், கொவிட்-19 கிருமிப் பரவல் குறித்த தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளும்படி சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் நடத்திய சந்திப்பின்போது இவ்வாறு பகிர்வதால் மற்ற நாடுகள் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க இது உதவும் என்று எடுத்துக்கூறப்பட்டது.
அண்மையில் சீனாவில் அதிகரித்துவரும் கிருமிப் பரவல் உலகெங்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கிருமித்தொற்றால் ஒருவர் உயிரிழந்ததாகவும் கிருமிப் பரவல் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 5,248 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ தகவலில் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் ஆகியோரின் எண்ணிக்கை குறைவாகவே காட்டப்படும் நிலையில் சீனாவில் மருத்துவமனைகளும் பிணவறைகளும் நிரம்பி வழிவதாகத் தெரிவதால் சீன அரசாங்கம் வெளியிடும் தகவல்கள் குறித்துக் கேள்வி எழுந்துள்ளது.
கிருமிப் பரவல் நிலவரம் குறித்து கூடுதல் விவரங்களைப் பெறுவதும் சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணத்துவ ஆதரவை வழங்குவது குறித்துத் தெரிவிப்பதும் இந்த சந்திப்பின் நோக்கங்கள்.
கொவிட்-19 கிருமித்தொற்றைக் கையாள்வது தொடர்பான நாட்டின் உத்திகளையும் கிருமித் திரிபுகளைக் கண்காணித்தல், தடுப்பூசி, மருத்துவமனைப் பராமரிப்பு, தொடர்பு, ஆய்வு, மேம்பாடு ஆகியவை குறித்தும் சீன அதிகாரிகள் பகிர்ந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிருமித்தொற்றால் மருத்துவமனையில் உள்ளோர், தீவிர சிகிச்சை அளிக்கப்படுவோர், உயிரிழந்தோர் குறித்த தகவல்களை வழக்கமான இடைவெளியில் பகிர்ந்துகொள்ளும்படி அவர்களிடம் வலியுறுத்தியதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.
குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடியோர், 60 வயதுக்குமேலானோர் ஆகிய பிரிவினருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்ட தகவல்களைப் பகிரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் தலைமையிலான கொவிட்-19 வல்லுநர் குழுவில் இணைந்து அணுக்கமாகச் செயலாற்றும்படி சீன விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருவோர் இனி கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் கிருமிப் பரவல் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டதாகவும் சீனா அண்மையில் தெரிவித்தது.
இருப்பினும் உலக நாடுகள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இன்று முதல் கொவிட்-19 பரிசோதனை அவசியம் என்று ஸ்பெயின் அறிவித்துள்ளது. சீனாவில் ஒருவேளை கிருமியின் புதிய திரிபு பரவக்கூடும் என்பதால் விரைந்து செயல்படுவது முக்கியம் என்பதை ஸ்பெயின் நாட்டுச் சுகாதார அமைச்சு சுட்டியது.