டாண்டேலி: குடும்பப் பிரச்சினை காரணமாக, பெண் ஒருவர் தன் ஆறு வயது மகனை முதலைகள் நிரம்பிய நீரோடையில் வீசிவிட்டுச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் சனிக்கிழமையன்று (மே 4) இந்தியாவின் கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்தில் நிகழ்ந்தது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, முதலைகள் பாதி கடித்துத் தின்ற நிலையில் அச்சிறுவனின் சடலத்தைக் காவல்துறையினர் மீட்டனர்.
சாவித்திரி ரவி ஷிராந்தி என்ற அப்பெண், இரவு 7 மணியளவில் தன் வீட்டிற்குப் பின்புறமாக ஓடும் நீரோடையில் தன் ஆறு வயது மகன் வினோத்தைத் தூக்கி வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த நீரோடை, டாண்டேலி முதலைப் பூங்காவை ஒட்டி அமைந்துள்ளது.
இரவு நேரம் என்பதால் அதிகாரிகளால் மீட்புப் பணியில் ஈடுபட இயலவில்லை. மறுநாள் காலையில் வினோத்தின் உடலை மீட்ட அதிகாரிகள், பின்னர் அதனை உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, வினோத்தின் தாய் சாவித்திரியையும் அவனுடைய தந்தை ரவிக்குமாரையும் காவல்துறை கைதுசெய்து, வழக்கு பதிந்துள்ளது.