புதுடெல்லி: இந்தியாவிற்குள் ஏர் இந்தியா விமானங்களில் ‘எக்கானமி’ வகுப்பில் பயணம் செய்வோர் இனி ‘செக் இன்’ பயணப்பொதியாக 15 கிலோவரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.
இதுவரை இந்த அதிகபட்ச வரம்பு 25 கிலோவாக இருந்து வந்தது.
அனைத்து முன்னணி இந்திய உள்நாட்டு விமானச் சேவை நிறுவனங்களும் 15 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றன. அதற்குமேல் எடுத்துச் செல்ல கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘கம்ஃபர்ட்’, ‘கம்ஃபர்ட் பிளஸ்’, ‘ஃபிளெக்ஸ்’ என மூன்று வகை பயணப்பிரிவுகளை உருவாக்கியது.
இந்நிலையில், இப்போது ‘கம்ஃபர்ட்’ ‘கம்ஃபர்ட் பிளஸ்’ பிரிவுகளில் பயணம் செய்வோர் ‘செக் இன்’ பயணப்பொதியாக 15 கிலோவரை மட்டுமே எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஃபிளெக்ஸ்’ பிரிவில் பயணம் செய்வோருக்கு 25 கிலோ பயணப்பொதிச் சலுகை தொடர்கிறது. ‘பிஸ்னஸ்’ வகுப்பில் பயணம் செய்வோர் 25 கிலோ முதல் 35 கிலோவரை எடுத்துச் செல்லலாம்.
ஏர் இந்தியாவின் அனைத்துலக விமானங்களில், சந்தைக்கு ஏற்ப பயணப்பொதிச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
ஏர் இந்தியா, டாடா நிறுவனத்திடம் கைமாறி, தனியார் நிறுவனமான பிறகு, இப்படி அதன் பயணப்பொதி சலுகை மற்ற விமான நிறுவனங்களுக்கு இணையாக மாற்றப்பட்டுவிட்டதால் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.