ஜெய்சல்மேர்: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் போர் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கி தீக்கிரையானது.
இவ்விபத்து செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 12) ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மேரில் நிகழ்ந்தது. அங்குள்ள ஒரு மாணவர் விடுதிக்கு அருகே அவ்விமானம் விழுந்து நொறுங்கியது.
அவ்விமானத்தின் விமானி வான்குடை மூலம் பாதுகாப்பாகக் குதித்துவிட்டதாக இந்திய விமானப் படை தெரிவித்தது.
கடந்த 23 ஆண்டுகளில், தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது இதுவே முதன்முறை. முன்னதாக, 2016ஆம் ஆண்டு தேஜஸ் விமானம் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக இந்திய விமானப் படை தனது எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளது.
இப்போது இந்திய விமானப் படையில் 40 தேஜஸ் எம்கே-1 இலகு ரக விமானங்கள் செயல்பாட்டில் இருப்பதாக என்டிடிவி செய்தி குறிப்பிட்டது.