காசர்கோடு: அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுச் சீட்டு விற்பனையில் மனைவி முதல் பரிசுக்குரிய சீட்டையும் கணவர் இரண்டாம் பரிசுக்குரிய சீட்டையும் விற்ற அதிசய நிகழ்வு இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
கேரள அரசாங்கத்தின் ‘பூஜா பம்பர்’ அதிர்ஷ்டக் குலுக்கலில் முதல் பரிசாக ரூ.12 கோடி அறிவிக்கப்பட்டது. அந்தப் பரிசுச்சீட்டை விற்றவர் காசர்கோட்டைச் சேர்ந்த மேரிக்குட்டி ஜோஜோ, 56.
இந்நிலையில், இரண்டாம் பரிசான ரூ.1 கோடிக்கான பரிசுச்சீட்டை அவருடைய கணவரான 57 வயது ஜோஜோ ஜோசஃப்தான் விற்றார் என்பது தெரியவந்துள்ளது.
அவர்கள் காசர்கோடு ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 25,000 ‘பூஜா பம்பர்’ நுழைவுச்சீட்டுகளை அவர்கள் வாங்கி விற்றனர்.
டாட்டா நேனோ கார் மூலம் பல இடங்களுக்கும் சென்று பரிசுச்சீட்டு விற்கிறார் ஜோசஃப்.
“பெரும்பாலான பரிசுச்சீட்டுகள் கண்ணூர் மாவட்டத்தில்தான் விற்றன. அதனால் முதல் பரிசு விழுந்த பெரும்பாலும் அங்குதான் விற்றிருக்கலாம்,” என்றார் அவர்.
முதல் இரண்டு பரிசுகளுக்குரிய பரிசுச்சீட்டுகளை வாங்கியோர் யார் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் அவர் சொன்னார்.
சென்ற ஆண்டு ‘ஓணம் பம்பர்’ அதிர்ஷ்டக் குலுக்கலில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனூப் என்பவர் ரூ. 25 கோடி முதல் பரிசை வென்றார். அதன்பின்னர் பலரும் நிதியுதவி கேட்டு அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.
அனூப் எதிர்கொண்ட மோசமான அனுபவத்தைத் தொடர்ந்து, வெற்றியாளர்கள் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்துவதில்லை.
இந்நிலையில், வெற்றிப் பரிசுச்சீட்டுகளை விற்ற மேரிக்குட்டி - ஜோசஃப் இணையர்க்கும் தரகுத்தொகை கிடைக்கும். அவ்வகையில் மேரிக்குட்டிக்கு ரூ.1.2 கோடியும் ஜோசஃப்புக்கு ரூ.10 லட்சமும் கிடைக்கும்.