புதுடெல்லி: விமானம் பறந்துகொண்டிருந்தபோது அதன் தளத்திலேயே ஆடவர் ஒருவர் சிறுநீர், மலம் கழித்ததாகக் கூறி சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வு இம்மாதம் 24ஆம் தேதி மும்பை-புதுடெல்லி இடையிலான ஏர் இந்தியா விமானத்தில் நடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
ராம் சிங் என்ற அப்பயணிக்கு இருக்கை எண் ‘17எஃப்’ ஒதுக்கப்பட்டிருந்தது என்றும் அவர் இருக்கை வரிசை 9இல் சிறுநீர், மலம் கழித்து, காறி உமிழ்ந்தார் என்றும் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
இத்தகாத செயலைக் கண்ட விமானப் பணியாளர், அவ்வாறு செய்தால் மற்றப் பயணிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்படலாம் என்று ராம் சிங்கை எச்சரித்தார்.
ராம் சிங்கின் செயல் மற்றப் பயணிகளை முகம் சுளிக்க வைத்தது.
விமானிக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் உடனடியாக ஏர் இந்தியா நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து, விமானம் தரையிறங்கியதும் ராம் சிங்கை அழைத்துச் செல்ல பாதுகாவலர்கள் தயார்நிலையில் இருந்தனர்.
விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் ராம் சிங் உள்ளூர்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒப்படைக்கப்பட்டார். அவர்மீது இரண்டு சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அருவருக்கத்தக்க செயலின்போது ராம் சிங் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.