புதுடெல்லி: இந்தியாவில் வேலை கிடைக்காத பட்டதாரிகளின் விகிதம் கூடியுள்ளதாக அண்மையில் ஐநா வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவித்தது.
இந்நிலையில், உதவியாளர் வேலைக்கு மாதம் ரூ.25,000 சம்பளம் தருவதாக சாலையோர உணவுக்கடையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அம்ரிதா சிங் என்ற ‘எக்ஸ்’ (முன்னர் டுவிட்டர்) ஊடகவாசி அதுகுறித்த பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்தி மொழியில் வெளியாகியுள்ள இப்பதிவுக்கு இணையவாசிகள் பலரும் வியப்பளிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“ஊதியத்துடன் இலவசமாக ‘மோமோ’வும் சாப்பிடலாம்,” என்று ஒருவர் எழுதியுள்ளார்.
“டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தைவிட அதிக ஊதியம் தருகின்றனர்,” என்று இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார்.
“நேரடி நேர்காணல் இடம்பெறுகிறதா?” என்று ஒருவர் கேட்டுள்ளார்.
அத்துடன், இணையவாசிகள் பலரும் அக்கடையின் முகவரியையும் தொடர்பு எண்ணையும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.