உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10ஆம் வகுப்பு மாணவனை அதே வகுப்பைச் சேர்ந்த மற்றொரு மாணவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலந்த்ஷெஹர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்பறையில் இரு மாணவர்களுக்கு இடையே, அமர இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வகுப்பு ஆசிரியர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்து இருவரையும் அமர வைத்துள்ளார்.
ஆனால், தனக்குப் பிடித்த இடம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த மாணவன், மறுநாள் துப்பாக்கியுடன் வகுப்பறைக்கு வந்து, தனக்கு இடம் தராத மாணவனின் நெற்றியில் சுட்டான்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவனை, துப்பாக்கி வைத்திருந்த மாணவன் மார்பிலும் வயிற்றிலும் சுட்டதாகக் கூறப்படுகிறது.
சுட்டுவிட்டு தப்பியோட முயற்சி செய்த மாணவனை சுற்றி வளைத்துப் பிடித்த ஆசிரியர்கள் போலிசில் ஒப்படைத்தனர்.
சம்பவத்தைப் பார்த்த மற்ற மாணவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.
ராணுவத்தில் இருந்து விடுப்பில் வீட்டுக்கு வந்த தன் மாமாவின் துப்பாக்கியை எடுத்து வந்து மாணவன் இந்தக் கொலையை செய்ததாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அந்தத் துப்பாக்கி தவிர, மற்றொரு நாட்டுத் துப்பாக்கியையும் அந்த மாணவன் வைத்திருந்தது போலிசாரைத் திடுக்கிட வைத்துள்ளது.
மாணவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.