ராஞ்சி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களிலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுவை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் வதேகார் பகுதியைச் சேர்ந்த மந்திரகுமாரி என்ற சுகாதார ஊழியர் அங்குள்ள 8 கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டுள்ளார்.
அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள அந்த கிராமங்களைச் சென்றடைய ஆற்றைக் கடந்து, சுமார் 35 கிலோமீட்டர் நடக்க வேண்டும்.
இந்நிலையில் தனது பச்சிளம் குழந்தையை முதுகில் சுமந்துகொண்டு தினமும் தடுப்பூசிப் பெட்டியைக் கையில் சுமந்தபடி அக்கிராமங்களுக்கு பணிநிமித்தம் சென்று திரும்புகிறார் மந்திரகுமாரி. மழைக்காலத்தில் ஆற்றைக் கடந்து செல்லமுடியாது என்பதால் தனது பணியை அதற்கு முன்பே முடித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்.
"குழந்தையை முதுகில் சுமந்து செல்வது எனக்குப் புதிதல்ல. பிரசவ கால விடுமுறை முடிந்த பின்னர் மூன்று மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தேன். அப்போது முதல் குழந்தையை முதுகில் சுமந்தபடிதான் பணியாற்றுகிறேன்," என்று சொல்லும் மந்திரகுமாரி, ஆற்றுத் தண்ணீர் கழுத்தளவு இருக்கும்போதும்கூட அதைப் பொருட்படுத்தாமல் தைரியமாக கடந்து சென்றதாகக் கூறுகிறார்.
அவர் சென்று வரும் கிராமங்கள் அனைத்தும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள இடங்களாகும். எனினும் மந்திரகுமாரி பயப்படவில்லை.
இந்த விவரம் தெரியுமென்றாலும் கிராம மக்களுக்குத் தடுப்பூசி போடுவது மிக முக்கியம் என்கிறார் மந்திரகுமாரி.
அவரது இந்த துணிச்சலையும் கிராம மக்கள் மீதான அக்கறையையும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.