பிரயாகை: உத்திரப் பிரதேசத்தில் பசுவதைத் தொடர்பான வழக்கு ஒன்றில் ஒருவருக்கு பிணை அனுமதிக்க மறுத்துவிட்ட சேகர் குமார் யாதவ் என்ற நீதிபதி, உயிர்வாயுவை சுவாசித்து அதை வெளியிடும் ஒரே ஒரு பிராணி பசுமாடுதான் என்று விஞ்ஞானிகள் நம்புவதாக தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அவர், 12 பக்க தீர்ப்பில் இந்த விவரத்தை தெரிவித்தார். பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் யாகத்தில் பயன்படுத்தப்படுவதால் சூரிய கதிர்களுக்குப் புதிய தெம்பு கிடைக்கிறது. இதனால் மழை பெய்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பசுவின் முக்கியத்துவத்தைத் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய அவர், பசும்பால், தயிர், நெய், கோமியம், சாணம் அனைத்தும் தீர்க்க முடியாத பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று இந்த நீதிபதி அண்மையில் ஒரு தீர்ப்பின் மூலம் வலியுறுத்தினார்.
இதனிடையே, நீதிபதி யாதவின் தீர்ப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பல ஊடகங்கள், பிபிசியின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டின.
எல்லா உயிரினங்களும் வெளியிடும் சுவாசக் காற்றில் உயிர்வாயு இருக்கும் என்றாலும் அது உள்ளிழுக்கும் காற்றில் இருக்கும் அளவைவிடக் குறைவாக இருக்கும் என்றும் அந்த பிபிசி கூறுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.