பாட்னா: நக்சலைட் இயக்கத்தினரால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தங்கள் வீட்டின் முன் தூக்கிலிடப்பட்ட சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள மனோபார் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்ஜு சிங். கடந்த ஆண்டு இவரது வீட்டில் தங்கியிருந்த நக்சலைட்டுகள் நான்கு பேர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆனால், சர்ஜு சிங்தான் நால்வரையும் உணவில் விஷம் வைத்து கொன்றுவிட்டார் என்றும் அதன் பிறகே தகவல் அறிந்து வந்த போலிசார் நால்வரையும் சுட்டுக்கொன்றதாக நாடகமாடி உள்ளனர் என்றும் நக்சலைட் இயக்கத்தினர் குற்றம்சாட்டி இருந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் நடந்த ஓராண்டுக்குப் பிறகு சர்ஜு சிங், அவரது மனைவி, இரண்டு மகன்கள் என நான்கு பேரையும் நக்சலைட்டுகள் அவர்களின் வீட்டின் முன்பே தூக்கிலிட்டுக் கொன்றுள்ளனர். பிறகு அவர்களுடைய வீட்டையும் குண்டு வைத்து தகர்த்தனர்.
மணிப்பூரில் பயங்கரம்
இதற்கிடையே, மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப்படை அதிகாரிகள் உள்ளிட்ட ஏழு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
துணை ராணுவப்படை அதிகாரி விப்லாவ் திரிபாதியின் மனைவி, மகனும் இதில் அடங்குவர். பயங்கரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.