புதுடெல்லி: ஆழ்கடல் கொள்கலன் கையாளும் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை சீனாவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு வழங்கி உள்ளது இலங்கை அரசு.
இதன்வழி இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் மேலும் அதிகரிப்பது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கவலையை ஏற்படுத்தும் என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆழ்கடல் கொள்கலன் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை முதலில் இந்தியா, ஜப்பானுடன்தான் செய்துகொண்டது இலங்கை அரசு. எனினும் கடந்த பிப்ரவரி மாதம் கோத்தாபய ராஜபக்சே நிர்வாகம், அதை ரத்து செய்தது.
இந்நிலையில், அதே ஒப்பந்தம் தற்போது சீன அரசு சார்பு நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் இல்லை. எனினும் சுமார் ஐநூறு மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் பல பில்லியன் டாலர்களை சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. மேலும், சீன அரசும் கடந்த சில ஆண்டுகளில் இலங்கை அரசுக்கு மிகப்பெரிய அளவில் கடன் அளித்து வந்துள்ளது.
இவ்வாறு பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத இலங்கை அரசு, அதற்கு ஈடாக, கடந்த 2017ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சீன நிறுவனத்திடம் 99 வருட குத்தகைக்கு ஒப்படைத்தது.
கடந்த 16 ஆண்டுகளில் ராஜபக்சே தரப்பின் கீழ் அமைந்த இலங்கை அரசாங்கம், சீனாவுக்கு அரசியல் ரீதியில் முக்கியத்துவம் அளித்து வருகிறது.