புதுடெல்லி: விரைவுச்சாலைகள் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் சென்ற ஆண்டு நிகழ்ந்த விபத்துகளில் மொத்தம் 47,894 பேர் உயிரிழந்துவிட்டதாக இந்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
முந்திய 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 53,8752ஆக இருந்தது.
வாகன வடிவமைப்பு, வாகனத்தின் நிலை, சாலைப் பொறியியல், அதிவேகம், போதையில் வாகனம் ஓட்டுதல், எதிர்த்திசையில் வாகனம் ஓட்டுதல், சிவப்பு விளக்கை மீறிச் செல்லுதல், கைபேசியில் பேசியபடியே வாகனம் ஓட்டுதல் போன்றவையே தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நேரிட முக்கியக் காரணங்கள் என்று அமைச்சர் கட்காரி பட்டியலிட்டார்.
தன்னிச்சையான சாலைப் பாதுகாப்பு வல்லுநர்களைக் கொண்டு, பாதுகாப்புத் தணிக்கைகள் மூலமாக சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளைத் தமது அமைச்சு வெளியிட்டுள்ளதாக அவர் கூறினார்.
டெல்லி, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் வாகனம், கைபேசி, ஆவணங்கள் குறித்த திருட்டுப் புகார்களுக்கு இணையம் வழியாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் திரு கட்காரி குறிப்பிட்டார்.