பாட்னா: பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள மோதிஹரி நகரில் நேற்று முன்
தினம் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தில் 12ஆம் வகுப்பு இந்தி தேர்வு எழுதினர்.
மகாராஜா ஹரேந்திர கிஷோர் சிங் கல்லூரியில் பிற்பகல் 1.45 மணிக்குத் தொடங்க வேண்டிய தேர்வு, மாணவர்களுக்கான இருக்கைகளை சரிவர அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
அதனால் மாலை 4 மணிக்கு மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கினர். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது. ஆனால் கல்லூரியில் மின்விளக்கு வசதி இல்லை.
அதனால் மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர், தங்களது கார் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டனர்.
காருக்குள் பெற்றோர் அமர்ந்திருக்க மாணவர்கள், வாகன வெளிச்சத்திலேயே 3 மணி நேரத் தேர்வை எழுதி முடித்தனர். முன்னதாக, கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததை எதிர்த்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
வாகன வெளிச்சத்தில் தேர்வு எழுதிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததால் அதுகுறித்து மாவட்ட கல்வி நிர்வாகம் விசாரித்து வருகிறது.