சண்டிகர்: ஒரு மாநிலத்தின் முதல்வரான தாம் பயங்கரவாதியைப்போல் நடத்தப்படுவதை ஏற்க இயலாது என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியும் அவரது தரப்பினரும் தம்மை பழிவாங்க முயற்சி செய்வதாக அவர் சாடியுள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஜலந்தர் நகருக்கு வந்திருந்தார். அதேவேளையில், சண்டிகரில் இருந்து தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிகாப்டரில் புறப்பட இருந்தார் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி.
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக சண்டிகரில் ஹெலிகாப்டர் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பயணம் ரத்தானது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சரண்ஜித் சிங், சொந்த மாநிலத்திலேயே தமது பிரசாரத்துக்கு தடைவிதிக்கப்படுவதாகப் புகார் எழுப்பினார்.
"கடந்த மாதம் ஃபெரோஸ்பூர் பகுதியில் தாம் தடுத்து நிறுத்தப்பட்டதால் என் மீது பிரதமர் மோடி வருத்தத்தில் உள்ளார். அதனால் என்னையும் விவசாயிகளையும் பஞ்சாப் மக்களையும் அவர் பழிவாங்க முயற்சி செய்கிறார்.
"நான் பஞ்சாபியர்களின் பக்கம் நிற்பேன். மீண்டும் என்னை தாக்கவோ, ஏன் கொலை செய்யவோ முயன்றாலும் அஞ்சமாட்டேன்," என்றார் முதல்வர் சரண்ஜித் சிங்.