கவுகாத்தி: பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த 'டுவிட் பதிவு' வழக்கில் குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியின்(படம்) பிணை மனு மீதான தீர்ப்பில் அசாம் நீதிமன்றம் நேற்று அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஜிக்னேஷ் மேவானியைக் கைது செய்ய வந்த அசாமின் பர்பேட்டாவைச் சேர்ந்த காவல்துறையினர், அவர் எந்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.
அசாமின் கோக்ரஜரைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் ஜிக்னேஷ் மேவானிக்கு எதிராக புகார் அளித்ததை அடுத்து, குஜராத்தின் பலன்பூரில் அசாம் காவல்துறை முதலில் அவரை கைது செய்தது.
இது தொடர்பாக பேசிய ஜிக்னேஷ் மேவானி, "இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் சதி. எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக இதை திட்டமிட்டுச் செய்து வருகின்றனர். ரோகித் வெமுலாவுக்குச் செய்தார்கள், சந்திரசேகர் ஆசாத்துக்குச் செய்தார்கள், இப்போது என்னைக் குறிவைக்கிறார்கள்," என்று கூறினார். ஜிக்னேஷ் மீது சதி, வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான குற்றம், சமய உணர்வுகளைத் தூண்டுதல் மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.