செய்தி & படங்கள்: எம். கே. ருஷ்யேந்திரன்
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது எங்களைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை என்கிறார்கள் நெட்டி மாலை தயாரிப்பில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் செல்வம்-வேதவள்ளி தம்பதியர்.
திரு செல்வம், 36, மணக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தையான திரு மகாலிங்கம், மாட்டுப்பொங்கல் நெட்டி மாலை தயாரிப்பதில் கெட்டிக்காரர். 10ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட திரு செல்வம், திரு மகாலிங்கம் மறைவுக்குப் பிறகு அந்தத் தொழிலைத் தானே மேற்கொண்டு நெட்டி மாலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
“பருவ காலத்திற்கு ஏற்றது போல் பல தொழில்களைச் செய்து வருகிறேன். பொங்கல் நெருங்கிவிட்டால் நெட்டி மாலை தொழில்தான் பிரதானம்.
“நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பரில் வேலையைத் தொடங்கிவிடுவோம். ஆண்டுதோறும் புதுவைக்குச் சென்று நீண்டு இருக்கும் நெட்டிச் செடி தண்டுகளை வெட்டி கட்டி வருவது வழக்கம்.
“மணக்குடியில் இருந்து சுமார் 110 கி.மீ. தொலைவில் இருக்கும் புதுவைப் பகுதியில் ஏராளமான ஏரிகள் உள்ளன. அவற்றில் நெட்டிச் செடிகள் மண்டிக்கிடக்கும்.
“அவற்றை இரண்டு, மூன்று ஆட்களை வைத்து பறித்து அங்கேயே குட்டி லாரி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி மணக்குடிக்குக் கொண்டு வருவேன்.
“அடுத்ததாக, ஏறக்குறைய 40 கி.மீ. தொலைவில் இருக்கும் காரைக்கால் பகுதிக்குச் சென்றால் தாழை மடல் நிறைய கிடைக்கும். அதைக் கொண்டு வந்து மடலில் இருந்து மேல் மட்டையைக் கிழித்து எடுத்து ஒவ்வொன்றும் ஒன்றரை மீட்டர் நீளத்துக்கு நார் நாராக கிழித்து காயபோட்டு வைத்துக்கொள்வோம்.
“நெட்டி மாலைக்கு உகந்தது தாழை நார்தான். தாழை நார் வலுவாக, உறுதியாக, எளிதில் அறுந்து போகாததாக இருக்கும். மாலை வளையாமல், துவண்டு விழாமல் இருக்க உதவும்.
“மூன்றாவதாக. மேற்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள கும்பகோணம் சென்று தண்ணீரில் கரையக்கூடிய வண்ணப் பொடியை வாங்கி வருவேன்.
“இவற்றுக்கெல்லாம் மொத்த செலவு சுமார் ரூ.10,000லிருந்து ரூ.12,000 ஆகும்.
“நெட்டிச் செடி தண்டின் நடுவே இயற்கையாகவே துவாரம் இருக்கும். தக்கைப் போன்று இருப்பதால் அதை நம் விருப்பத்திற்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் செதுக்கி பல வடிவங்களில் செய்துகொள்ளலாம்.
“எங்கள் வீட்டின் கொல்லைப் புறத்தில் வேலையைத் தொடங்குவோம். நெட்டியைப் பதப்படுத்தி, அதைக் கத்தியால் பூ, கரணை, பட்டை, சதுரப் பட்டை, கூந்தல், குஞ்சம் போன்ற பல வடிவங்களில் பலவிதமாக முதலில் செதுக்கிக்கொள்வோம்.
“பிறகு அதிக வேலைப்பாடுள்ள பூ, குஞ்சம், கூந்தல் போன்றவற்றை விட்டுவிட்டு மற்றவற்றை மொத்தமாக சிவப்பு, பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள், ஊதா உள்ளிட்ட பல வண்ணச் சாயத்தில் நனைத்து எடுத்துவிடுவோம்.
“எல்லாவற்றையும் வெய்யிலில் காயவைத்து பிறகு தாழை நாரைக் கொண்டு கோத்து மாலையாக உருவாக்குவோம்.
“மாலை உருவான பிறகு பூ, குஞ்சம், கூந்தல் போன்றவற்றைத் தனித்தனியாக பல வண்ணங்களில் நனைத்து எடுத்து கொடியில் கட்டி காய விட்டுவிடுவோம்.
“பொங்கலுக்கு ஒரு வார காலம் இருக்கையில் இவ்வளவு வேலைகளையும் முடித்துவிடுவோம்.
“இப்படி நாங்கள் 1,000 முதல் 3,000 மாலைகள் வரை தயாரிக்கிறோம். அவற்றை மொத்த விற்பனைக்கு என்றால் ஒரு மாலை ரூ.12 விலைக்கு விற்கிறோம். சில்லறை விற்பனையில் ஒரு ஜோடி மாலை ரூ.50க்கு கொடுக்கிறோம். 3,000 மாலை தயாரித்தால் ஏறக்குறைய ரூ.20,000 லாபம் கிடைக்கும். பொங்கல் செலவு போக கொஞ்சம் பணம் மிஞ்சும்.
“இப்போது பிளாஸ்டிக் மாலைகள் வந்துவிட்டாலும் எங்களுக்குத் தொழில் ஏற்ற இறக்கமின்றி நடந்து வருகிறது.
“மொத்தத்தில் தை பிறந்தால் நெட்டி மாலை வடிவில் எங்களுக்கு வழி பிறக்கிறது,” என்று திரு செல்வமும் திருமதி வேதவள்ளி செல்வமும் கூறினர்.
நெட்டி மாலை செய்பவர்களைத் தேடி அலைந்தபோது மணக்குடிக்குச் சென்றால் சிலரைப் பார்க்கலாம் என்று வழியில் சிலர் கூறியதை அடுத்து அங்கு சென்றபோது ஒரு வீட்டில் நெட்டி மாலை கொடியில் காய்ந்துகொண்டு இருந்தது.
அந்த வீட்டை விசாரித்தபோது திரு செல்வம் கொல்லைப்புறத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரும் துணைவியாரும் மாலைகளுக்குச் சாயம் நனைத்துக்கொண்டு இருந்தனர்.
இத்தம்பதிக்கு தருண், 7, கார்த்திகேயன், 5, என்ற மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் படித்து வருகிறார்கள்.
திரு செல்வத்தின் உறவினர்களும் நெட்டி மாலை தொழிலைத் தலைமுறை தலைமுறையாகச் செய்து வருகிறார்கள்.
நான்கு நாள்கள் கொண்டாடப்படும் தமிழர்களின் பொங்கல் பண்டிகை அவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் நன்றி சொல்வதோடு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் தமிழர்கள் நன்றி கூறி மனநிறைவடையும் விழா பொங்கல்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தொன்றுதொட்டு நம்பப்படுகிறது.
அறுவடையானதும் தை முதல் தேதி வரும் பொங்கல் பண்டிகை மங்கலகர மானது. மாட்டுப் பொங்கல் மேலும் அலங்காரமயமானது.
மாட்டுப் பொங்கல் அன்று பொங்கல் பானைகளுக்கு மட்டுமன்றி பசு, காளை, கன்றுகள் ஆகியவற்றைச் சுத்தமாகக் குளிப்பாட்டி கொம்புகளுக்குச் சாயம் தீட்டி, மஞ்சள், குங்குமம், சந்தனப் பொட்டு வைத்து, கள்ளிப்பால் திருஷ்டிப் பொட்டு வைத்து நெட்டி மாலை, மாவிலை, வேப்ப இலைத் தோரணமாலை, கரும்பு, வாழைப்பழ மாலைகளை அவற்றுக்குப் போட்டு ஜோடிப்பார்கள்,
மாடுகளுக்குப் படையல் வைத்து, உலக்கையைப் போட்டு தாண்ட வைத்து, வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று நடக்கவிட்டு அவற்றுக்கு நன்றி கூறுவது தமிழர்களின் சிறப்பு. இப்போது நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளையும் நெட்டி மாலையால் அலங்கரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
“மங்கலகரமான மாட்டுப் பொங்கலை மேலும் மங்கலகரமானதாக ஆக்கும் வகையில் நாங்கள் நெட்டி மாலை தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
“மாட்டுப் பொங்கலன்று காளைகளும் பசுக்களும் கன்றுகளும் எங்கள் வண்ண வண்ண மாலைகளுடன் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதைக் காண எங்களுக்கு மட்டுமன்றி உங்களுக்கும் கண் கோடி வேண்டும். அதற்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது,” என்று செல்வம் தம்பதியர் கூறினர்.
பொங்கல் மங்கலகரமான கொண்டாட்டம். நன்றி சொல்லும் விழா. காளை, பசு மாடுகளை வணங்கி அவற்றுக்குப் படைத்து மகிழும் பண்டிகை மாட்டுப் பொங்கல். நாங்கள் தயாரிக்கும் மாலைகளுடன் காளைகளை, பசுக்களை, கன்றுகளைப் பார்ப்பதில் கிடைக்கும் மனநிறைவுக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது.
திரு செல்வம், 36.
மணக்குடி என்ற கிராமத்தில் தன் வீட்டுக் கொல்லைப் புறத்தில் தன் மனைவி வேதவள்ளி உதவியுடன் திரு செல்வம், மாலைக்குச் சாயம் நனைக்கிறார். விற்பனைக்குத் தயாரான வண்ண நெட்டி மாலை ஒன்றின் மொத்த விற்பனை விலை ரூ.12 என்றார் செல்வம்.