இந்தியா சுதந்திரம் அடைந்தபோது திருவாவடுதுறையைச் சேர்ந்த மாணிக்க ஓதுவார் கோளறு பதிகம் ஓத, கட்டளைத் தம்பிரான் சடைச்சாமி அவர்கள், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் மடத்தின் செங்கோலை ஒப்படைத்தார்கள் என்பது வரலாறு.
இதற்கு நடமாடும் ஒரே சாட்சியாக திருவாவடுதுறையில் ஒருவர் இருக்கிறார்; அண்மையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அந்த முதியவரைச் சந்தித்து, வரலாற்று சிறப்புமிக்க தகவல் களைக் கேட்டறிந்து அவற்றை ஆவணப்படுத்தி இருக்கிறார் என்ற செய்தி கேள்விப்பட்டு திருவாவடுதுறைக்கு விரைந்தேன்.
அங்கு போய் விசாரித்த போது, அந்த வரலாற்று சம்பவத்திற்கு ஒரே சாட்சி திரு மாசிலாமணி பிள்ளைதான். திரு பிள்ளைதான் இன்னமும் நடமாடும் வரலாறாக இருக்கிறார் என்று பலரும் கூற திரு பிள்ளை அவர்களை அவரின் வீட்டில் சந்தித்தேன்.
“அப்போது எனக்கு வயது 23. மடத்தில் வேலை பார்த்தேன்.
“குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் மடத்தின் 20வது பட்டத்தில் இருந்தார். மன்னர் காலத்தின்போது புதிய மன்னர் பொறுப்பேற்கையில் சமயத் தலைவர் கையால் செங்கோல் புதிய மன்னரிடம் ஒப்படைக்கப்படும்.
“இந்த வழமையைப் பின்பற்றி இந்தியாவிடம் சுதந்திரத்தை ஒப்படைக்கலாம் என்று அப்போது மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த திரு ராஜாஜி யோசனை தெரிவித்தார்.
“அதையடுத்து மடத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. குருமகா சன்னிதானம் அவர்கள், தானே பொறுப்பெடுத்துக்கொண்டு ஆறடி நீளத்திற்குத் தங்க மூலாம் பூசப்பட்ட செங்கோலைத் தயாரிக்கும் பொறுப்பை, அப்போது சென்னையில் பிரபலமாக இருந்த உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடையின் உரிமையாளரை நேரில் வரவழைத்து பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.
“சொன்னபடியே மடத்திற்குப் பெரிய பெட்டியில் வைக்கப்பட்டு செங்கோல் வந்தது.
“செங்கோலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படலாம் என்பதால் பெட்டியைத் திறத்து பார்க்க வேண்டாம் என்று ஆதீனகர்த்தர் உத்தரவிட்டதால் மடத்தில் அந்தப் பெட்டி திறக்கப்படவே இல்லை.
“ஆதீனத்தில் அப்போது கட்டளைத் தம்பிரானாக இருந்த திருவதிகை தம்பிரான் குமார சுவாமி அவர்களும் மாணிக்க ஓதுவாரும் டெல்லிக்குப் போவது என்று முடிவு செய்யப்பட்டது.
“திருவதிகை தம்பிரான் நீண்ட சடை வைத்து இருப்பார். அதனால் அவருக்குச் சடைச்சாமி என்று பெயர். மடத்தின் ஆஸ்தான நாதஸ்வர வித்வானாக இருந்த திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையும் சென்றார்.
“நல்ல சுப நேரத்தில் கிளம்பி ரயில் மூலம் எல்லோரும் சென்னை சென்று அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி போய்ச் சேர்ந்தார்கள்.
“1947 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியாவின் கடைசி வைசிராயாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு முன்னிலையில் மாணிக்க ஓதுவார் கோளறு பதிகத்தில் இருந்து ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ என்ற சைவ சமயக் குரவர் சம்பந்தரின் செந்தமிழ்ப் பாடலை ஓத, ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரம் ஒலிக்க, சடைச்சாமி அவர்கள் செங்கோலை நேரு விடம் ஒப்படைத்தார்.
“இந்தியா சுதந்திர நாடாக ஒளிவீசத் தொடங்கியது,” என்றார் திரு மாசிலாமணி பிள்ளை.
திருவாவடுதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட திரு பிள்ளைக்கு வயது 97. தன் துணைவியார் திருமதி ருக்மணி ஆச்சியுடன்,87, அவர் திருவாவடுதுறையிலேயே வசித்து வருகிறார். அவரை பிள்ளை என்றுதான் அங்கு எல்லாரும் அழைக்கிறார்கள்.
1952ல் மணம்புரிந்த இத்தம்பதிக்கு நான்கு மகன்கள், ஒரு மகள். மகள் குடும்பத்தோடு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலை பார்க்கிறார்கள்.
“தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சென்ற ஆண்டு திருவா வடுதுறை மடத்திற்கு வந்து இப்போதைய 24வது ஆதீனகர்த்தரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.
“என்னைச் சந்தித்து அந்த வரலாற்று விவரங்களைத் திரட்ட வேண்டும் என்று விரும்பி, மாவட்ட ஆட்சியர் மூலம் அவர் எனக்கு அழைப்பு விடுத்தார்.
“சென்ற ஆண்டு ஜூலையில் சென்னை சென்று ஆளுநரை ராஜ்பவனில் சந்தித்தேன்.
“ஒலி, ஒளிப்பதிவு செய்தார்கள். நான் தெரிவித்த விவரங்கள் எல்லாம் வரலாற்று ஆவணங்களா கப் பதியப்படும் என்று ஆளுநர் கூறினார்,” என்றார் திரு பிள்ளை.
திரு பிள்ளையிடம் பேசிய போது அவர் ைசவ நெறியாளராக மட்டுமன்றி இந்தக் காலத்திற்கும் பொருத்தமானவராக வாழ்ந்துவருவது தெரிந்தது. எனக்கே வியப்பாகிவிட்டது. திரு பிள்ளை தம்பதியிடம் ஆசி வாங்கி, புறப்பட்டபோது அவரின் வாழ்க்கைப் பாணி பற்றி கேட்டேன்.
“புரிந்துணர்வுமிக்க மனைவி கிடைப்பது பாக்கியம். எனக்குப் பெரும் பாக்கியம் கிடைத்து இருக்கிறது,” என்றாரவர்.
நடமாடும் வரலாறாக மட்டு மன்றி, பழமைமிக்க திருவாவடு துறைக்கு ராஜ கலையாகவும் திரு பிள்ளை அவர்கள் திகழ்வதாக உடனிருந்தவர்கள் கூறினர்.
திரு மாசிலாமணி பிள்ளை தன் துணைவியார் ருக்மணி ஆச்சியுடன் தன் வீட்டிற்கு வெளியே.
திரு பிள்ளை, மடத்தில் ஏறக்குறைய 65 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார். ஆறு பண்டார சன்னிதிகளை இவருக்குத் தெரியும். நால்வரின் கீழ் இவர் வேலை பார்த்து இருக்கிறார்.
1947ஆம் ஆண்டு. எனக்கு அப்போது 23 வயது. சென்னையில் இருந்து மடத்திற்கு ஒரு பெரிய பெட்டி வந்தது. செங்கோல் இருந்த அந்தப் பெட்டி, ஆதீனகர்த்தர் கட்டளையின்படி மடத்தில் திறக்கப்படவில்லை என்கிறார் திருவாவடுதுறையைச் சேர்ந்த திரு மாசிலாமணி பிள்ளை, 97.
திருவாவடுதுறை திரு மாசிலாமணி பிள்ளை, 97.
திருவாவடுதுறை ஆதீனம் நந்தி பரம்பரை யில் வந்தது என்பதால் செங்கோலின் உச்சியில் நந்தி இருக்கவேண்டும் என்று ஆதீனகர்த்தர் உத்தரவிட்டார். செங்கோல் இப்போது அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.