பாட்னா: கைநிறைய சம்பளத்துடன் வேலை எனக் கூறி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, ஆப்பிரிக்க நாடான லிபியாவில் ஒரு கட்டுமானத் தளத்தில் கொத்தடிமைகளாகச் சிக்கித் தவித்த இந்தியர்கள் 12 பேரை இந்திய அரசாங்கம் மீட்டுள்ளது.
துபாயைச் சேர்ந்த வேலை முகவர் ஒருவர் அவர்களை இப்படி ஏமாற்றியதாகக் கூறப்பட்டது.
அவர்களில் பத்து பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பீகாரையும் மற்றொருவர் இமாச்சலப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள்.
கடந்த பிப்ரவரியிலும் இம்மாதத்திலும் இரண்டு தொகுதிகளாக அவர்கள் இந்தியாவிற்குத் திரும்ப அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், தாங்கள் லிபியாவில் பட்ட துன்பங்களைச் செய்தியாளர்களிடம் அவர்கள் விவரித்தனர்.
தாங்கள் நாளொன்றுக்கு 15 மணி நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டோம் என்றும் அதற்குச் சம்பளம் தரவில்லை என்றும் இணங்க மறுத்தால் அடிதான் என்றும் அவர்கள் கூறினர்.
அவர்களில் பெரும்பாலோருக்கு கொவிட்-19 பரவல் காலத்தில் வேலை போய்விட்டது.
அதனால், கிடைத்த வேலையைச் செய்துவந்த அவர்கள், மோசடி வேலை முகவரிடம் சிக்கி, கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் இந்தியாவைவிட்டுக் கிளம்பினர்.
அவர்களுள் ஒருவரான பஞ்சாப்பைச் சேர்ந்த ஜமாலுதீன், 56, தமக்கு ஓரளவு நல்ல சம்பளத்துடன் வேலை என்று உறுதியளிக்கப்பட்டதாகக் கூறினார்.
“போக்குவரத்துச் செலவிற்காக நாங்கள் எல்லாரும் கடன் வாங்கியிருந்தோம். ஒவ்வொருவரும் ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை செலவு செய்துள்ளோம்.
“துபாயைச் சென்றடைந்ததும் இன்னும் வேலை தயாராகவில்லை என்றும் ஒன்று, இந்தியா திரும்புங்கள், இல்லையெனில் லிபியா செல்லுங்கள் என்றும் கூறிவிட்டனர்.
“வேலை வேண்டும் என்பதால் நாங்கள் லிபியா சென்றோம். அங்கு சென்றதும் ஒரு கட்டுமானத் தளத்தில் நாங்கள் அடைக்கப்பட்டு, ஊதியமின்றி வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டோம்.
“எங்களுக்குச் சரியான உணவும் வழங்கப்படவில்லை. எங்களை பல சமயங்களில் அடித்து மிரட்டினர்,” என்று லிபியாவில் தாங்கள் பட்ட இன்னல்களை திரு ஜமாலுதீன் பகிர்ந்துகொண்டார்.