புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் ஷரத் சந்திரா ரெட்டி, அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ளார்.
இதனால் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கவிதாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த ஷரத் சந்திரா ரெட்டி, அரசு சாட்சியாக மாறுவதற்கு டெல்லி நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.
இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டதாகவும் அதன் முடிவில் அவரது கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும் டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கையால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக ஷரத் சந்திரா ரெட்டி உள்ளிட்ட தொழிலதிபர்கள் பலனடைந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இதே வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதாகி உள்ளார்.
இந்நிலையில், ஷரத் சந்திரா ரெட்டி திடீரென அரசு சாட்சியாக மாறியிருப்பது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் தெலுங்கானா முதல்வர் மகள் கவிதாவுக்கு நெருக்கடி ஏற்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.