புவனேஸ்வர்: ‘இண்டர்காண்டினென்டல்’ கிண்ணத்தில் வெற்றிபெற்றதற்காக ஒடிசா அரசாங்கம் வழங்கிய ரொக்கப்பரிசின் ஒருபகுதியை பாலேஸ்வர் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நன்கொடையாக வழங்குவதாக இந்தியக் காற்பந்து அணி அறிவித்துள்ளது.
போட்டியை ஏற்று நடத்திய இந்தியா, லெபனான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. அந்தத் தொகையில் இருந்து ரூ 20 லட்சத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக இந்தியக் காற்பந்து அணி கூறியது.
“பரிசளித்த ஒடிசா அரசாங்கத்திற்கு நன்றி, இம்மாதத் தொடக்கத்தில் அம்மாநிலத்தில் நடந்த எதிர்பாரா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் ஒரே மனதுடன் அணி முடிவெடுத்ததாக” இந்திய காற்பந்து அணி சமூக ஊடகத்தில் பதிவிட்டது.
தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எதுகொடுத்தாலும் ஈடாகாது, இருப்பினும் எங்களது சிறு உதவி அவர்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவக்கூடும் என்றும் அது கூறியது.
ஜூன் 2 ஆம் தேதி இரவு, பாலேஸ்வர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் கிட்டத்தட்ட 290 பேர் உயிரிழந்தனர்; ஏறத்தாழ 1,000 பேர் காயமுற்றனர்.