திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக அலிபிரி மலைப்பாதையில் பாத யாத்திரையாக ஒரு குடும்பத்தினர் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது பெற்றோர் முன்னால் செல்ல, தனது தாத்தாவுடன் கெளசிக் என்ற ஐந்து வயதுச் சிறுவன் ‘சிப்ஸ்’ சாப்பிட்டபடி சென்றுகொண்டிருந்தான்.
அச்சமயத்தில் அங்குள்ள வனப்பகுதியில் இருந்து ஓடிவந்த சிறுத்தை ஒன்று கெளசிக்கை கவ்விக்கொண்டு ஓடியது.
இதைக் கண்ட இதர பக்தர்களும் சிறுவனின் உறவினர்களும் கூச்சல் போட்டதை அடுத்து, சிறுவனை அப்படியே விட்டுவிட்டு சிறுத்தை தப்பி ஓடியது.
மீட்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தலைமை வனத்துறை செயல் அதிகாரி தர்மா கூறுகையில், “திருப்பதி மலைக்கு வியாழன் இரவு தனது குடும்பத்தினருடன் சென்றுகொண்டிருந்த சிறுவனை சிறுத்தைக்குட்டி ஒன்று பாய்ந்து வந்து தூக்கிச் சென்றது.
“ 500 அடி தூரம் இழுத்துச் சென்ற நிலையில், அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர் ஒருவர் ராட்சத விளக்கின் மூலம் சிறுத்தை மீது வெளிச்சத்தைப் பாய்ச்சினார்.
“ உடனே சிறுவனை விட்டுவிட்டு சிறுத்தை தப்பியது. சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டுள்ளது. வேறு பகுதியில் அதனை விடுவிக்க உள்ளோம்,” என்றார்.