மும்பை: மும்பை அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை மேற்கொண்ட சுங்க அதிகாரிகள், ஆப்பிரிக்கப் பயணி ஒருவர், போதைப் பொருளைக் குழாய் மாத்திரைகளாக விழுங்கிக் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
நீதிமன்ற அனுமதியுடன் அந்தப் பயணியை மருத்துவமனையில் அனுமதித்து கடந்த பத்து நாள்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்து 43 குழாய் மாத்திரைகளை வெளியே கொண்டு வந்தனர்.
ஜூன் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது வயிற்றில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட குழாய் மாத்திரைகளில் 500 கிராம் எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.5 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ஆப்பிரிக்கப் பயணி மீது போதைப்பொருள் கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் இப்போது 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.