புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தி திங்கட்கிழமை மக்களவைக்குத் திரும்பினார். கிட்டதட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த அவர், அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் அவர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவதூறு வழக்கில் அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட ஈராண்டு சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து மக்களவை செயலகம் அவரது உறுப்பினர் தகுதி நீக்கத்தைத் திரும்பப் பெற்றது.
ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டதை தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லம் முன்பு கூடிய கட்சித் தொண்டர்கள் மேளதாளத்துடன், பொய்க்கால் குதிரை நடனம் ஆடியும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.