பெங்களூரு: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கபலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவரது மனைவி பூஜா. இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
இதற்கிடையே, பூஜா அதிக நேரம் கைப்பேசியைப் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். இன்ஸ்டகிராம் வலைத்தளத்தில் காணொளிகளைப் பதிவேற்றம் செய்தார்.
இதனால் ஸ்ரீநாத்திற்கும் பூஜாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், தன் மனைவி வெறோரு நபருடன் தொடர்பில் உள்ளார் எனவும் ஸ்ரீநாத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில், கைப்பேசி பயன்படுத்துவது தொடர்பாக இருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவியின் துப்பட்டாவால் பூஜாவின் கழுத்தை நெரித்து ஸ்ரீநாத் கொலை செய்தார்.
பின்னர், மனைவியைக் கொலை செய்தது குறித்து ஸ்ரீநாத் தனது மாமனார் சேகரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இருவரும் சேர்ந்து கொலையை மறைக்க திட்டம் தீட்டினர். அதன்படி, ஸ்ரீநாத்தும், மாமனார் சேகரும் சேர்ந்து பூஜாவின் உடலைக் கட்டி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சென்றனர்.
அங்கு பூஜாவின் உடலில் கல்லைக்கட்டி ஆற்றில் வீசினர். பின்னர், கொலை சம்பவம் நடந்த மறுநாளிலிருந்து சில நாட்களுக்கு ஸ்ரீநாத் அருகில் உள்ள வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று வழிபாடு செய்துள்ளார். பின்னர், காவல்துறையிடம் சரணடைந்த ஸ்ரீநாத் தன் மனைவி பூஜாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும், கொலைக்குத் தன் மாமனார் சேகரும் உடந்தையாக இருந்ததையும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மனைவியைக் கொலை செய்து ஆற்றில் வீசிய ஸ்ரீநாத்தையும் உடந்தையாக இருந்த மாமனார் சேகரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், ஆற்றில் வீசப்பட்ட பூஜாவின் உடலைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.