புதுடெல்லி: இந்தியா வாகனங்களில் இருந்து வெளிவரும் கரிமக்கழிவைக் குறைக்கத் திட்டமிடுகிறது.
நகர்களில் அதிகரித்துவரும் போக்குவரத்துத் தேவைகளைத் திறம்பட நிறைவேற்றவும் அது விரும்புகிறது.
இந்த நிலையில், பொதுப் போக்குவரத்து வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக மாற்ற அது 576.13 பில்லியன் ரூபாய் (S$9.4 பில்லியன்) முதலீட்டை அங்கீகரித்து இருக்கிறது.
அந்த முதலீடுகளின் உதவியால், 10,000 மின்சாரப் பேருந்துகள் பல நகர்களிலும் இயங்க வழிபிறக்கும்.
தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த விவரங்களை புதன்கிழமை தெரிவித்தார்.
இந்தியாவின் பல நகர்களிலும் பொதுப் போக்குவரத்து வசதிகள், குறிப்பாகப் பேருந்துகள் போதிய அளவுக்கு இல்லை என்று அவர் கூறினார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், பெரும் தொகை ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்றும் அதன்மூலம் மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசாங்கம் அந்தத் திட்டத்திற்கு ரூ.200 பில்லியன் வழங்கும். தனியார் துறையும் அந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
300,000 பேர் முதல் 4 மில்லியன் மக்கள் வரை வசிக்கும் நகர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் நன்மைபெற போட்டியிட்டுப் பயனடையலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் பருவநிலை பிரமுகர் ஜான் கெர்ரியும் இந்தியாவின் கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டேவும் சென்ற மாதம் புதுடெல்லியில் சந்தித்தனர்.
இந்தியாவில் 10,000 மின்சாரப் பேருந்துகளை விரைந்து சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தேவைப்படும் அமெரிக்க நிதி ஆதரவு பற்றி அந்தத் தலைவர்கள் விவாதித்தனர்.
இந்தியாவில் மின்சார வாகன விற்பனை 2022ல் இரண்டு மடங்கிற்கும் மேலாகக் கூடி 1.4 மில்லியனாக இருந்தது.
அங்கு 2019ஆம் ஆண்டு வாக்கில் 1.9 மில்லியன் பேருந்துகள் செயல்பட்டன. பொதுப் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்ற மேலும் 3 மில்லியன் பேருந்துகள் தேவைப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்து இருக்கிறது.
மின்சாரப் பேருந்துகளை இயக்குவது பெரும்பாலும் லாபகரமானது. என்றாலும்கூட அரசாங்கம் மானியம் அளித்து மின்சாரப் பேருந்துத் திட்டத்திற்கு ஊக்கமூட்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.