பாகு: பிடே உலகக் கிண்ண சதுரங்கப் போட்டி அஸர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இந்திய ‘இளம் புயல்’ தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக வெற்றியாளருமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர்.
இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தைக் கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35வது நகர்த்தலில் டசமநிலையில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2வது சுற்று வியாழக்கிழமை அரங்கேறியது.
இதில் வெற்றி பெறும் வீரர் உலக சாம்பியன் ஆகிவிடுவார் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது. பிரக்ஞானந்தா கறுப்பு நிறக் காய்களுடன் விளையாடினார். சாதுர்யமாக காய்களை நகர்த்தி அசத்திய பிரக்ஞானந்தாவுக்கு எதிராளியிடம் இருந்து பெரிய அளவில் நெருக்கடி எதுவும் வரவில்லை.
11வது நகர்த்தலுக்குள் ராணியையும், இரு குதிரையையும் இருவரும் பரஸ்பரமாக ‘வெட்டு’ கொடுத்தனர். ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை சமநிலையில் முடிக்க ஒப்புக்கொண்டனர். அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. சமநிலையின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது.
இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய வியாழக்கிழமை டைபிரேக்கர் கடைப்பிடிக்கப்பட்டது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ‘ரேபிட்’ முறையில் நடக்கும் டைபிரேக்கரில் முதலில் இரு ஆட்டங்களில் ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும்.
அத்துடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடி அதிகரிக்கப்படும். இதிலும் சமநிலை தொடர்ந்தால் தலா 10 நிமிடங்கள் கொண்ட மேலும் இரு ஆட்டங்களில் மோதுவார்கள். அதன் பிறகு 5 நிமிடம் கொண்ட ஆட்டங்கள், 3 நிமிடம் ஆட்டம் என்று முடிவு கிடைக்கும் வரை நீடிக்கும். இந்நிலையில் டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். முதல் 10 நிமிடங்கள் சிறப்பாக விளையாடிய அவர் கடைசி 10 நிமிடத்தில் தடுமாறினார்.இதில் சுதாரித்துகொண்ட கார்ல்சன் அவரை வீழ்த்தினார். இதன் மூலம் டைபிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.