புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், 2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்திதான் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் என்றார்.
இண்டியா கூட்டணியில் உள்ள 26 எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன. அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இண்டியா கூட்டணியின் அவசியத்தைப் பற்றி, வரும் தேர்தல்களில் மக்களுக்கு விளக்க வேண்டும்.
பிரதமர் மோடி 2014ல் ஆட்சிக்கு வந்தபோது 31 விழுக்காடு வாக்குகளையே பெற்றிருந்தார். எஞ்சிய 69 விழுக்காடு வாக்குகள் அவருக்கு எதிராகவே இருந்தன. கடந்த மாதம் பெங்களூருவில் இண்டியா கூட்டணி ஆலோசனை நடத்தியபோது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அச்சத்தைத் தந்தது.
2024 தேர்தலில் 50 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் மோடி வேண்டுமானால் நம்பிக்கை தெரிவிக்கலாம் ஆனால் அதற்கு சிறிதும் வாய்ப்பில்லை.
மோடி புகழின் உச்சியில் இருந்தபோதே அவரால் 50 விழுக்காடு வாக்குகளைப் பெற இயலவில்லை. எனவே 2024 தேர்தலில் இந்த விழுக்காடு இன்னும் குறையவே செய்யும். 2024 தேர்தல் முடிவுகள் பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும்.
ஒரு ஜனநாயகத்தில் எதிர்காலத்தைப் பற்றி ஆரூடம் கூறுவதுபோல் வெற்று கணிப்புகளைக் கூறுவது சாத்தியமே இல்லை. ஆனால் மோடியின் பேச்சுக்கள் அனைத்தும் அப்படித்தான் உள்ளன. பிரதமர் மோடி நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டார். ஆனால் அவை என்னவானது என்பது மக்களுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.
மேலும் முதல்வர் அசோக் கெலாட் சந்திரயான் வெற்றி குறித்து கூறுகையில், சந்திரயான்-3 வெற்றிக்கு பிரதமர்கள் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தியும் காரணம். அவர்களின் கடின உழைப்பின் பலனே இன்றைய வெற்றிகள். விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் ஆலோசனைகளுக்கு செவிமடுத்து நேரு விண்வெளி ஆராய்ச்சி மையத்தை நிறுவினார். அதற்கு இஸ்ரோ எனப் பெயர் சூட்டியவர் இந்திரா காந்தி ஆவார்,” என்றார்.