புதுடெல்லி: இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் இன்னும் சில நாள்களில் ஜி20 உச்சநிலை மாநாடு நடக்கவிருக்கிறது.
அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. உலகத் தலைவர்களை வரவேற்க புதுடெல்லி வண்ண வண்ண அலங்காரங்களுடன் விழாக்கோலம் காண்கிறது.
பூக்களாலும் வாசகக் கொடிகளாலும் நகர் முழுவதும் சோடிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில், அந்த அலங்காரங்களை கெடுத்துவிடும் அளவுக்குக் குரங்கு தொல்லைகள் அதிகமாக இருப்பதால் அவற்றை விரட்ட 30 குரங்கு மனிதர்களைக் கொண்ட ஒரு படையை புதுடெல்லி நிர்வாகம் பணியில் அமர்த்தி இருக்கிறது.
குரங்குகளைப் போல வேடமிட்டிருக்கும் அந்தப் படையினர், சத்தம் போட்டு குரங்குகளைப் பயமுறுத்தி விரட்டிவிடுவார்கள்.
இதற்காகவே அவர்கள் சிறப்புப் பயிற்சியைப் பெற்று இருக்கிறார்கள் என்று புதுடெல்லி மாநகர நிர்வாகத்தின் துணைத் தலைவர் சதிஷ் உபாத்தியா கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.
உலகத் தலைவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல்கள் ஒவ்வொன்றிலும் குரங்குகள் அதிகமாக தொல்லை கொடுக்கும் இடங்களிலும் தலா ஒரு குரங்கு மனிதர் நிறுத்தப்படுவார் என்று அவர் தெரிவித்தார்.