கோல்கத்தா: மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் மகாட்டோ என்பவர் தான் காதலித்த ஒரு பெண்ணுக்கு நிலாவில் நிலம் வாங்கித் தருவதாக திருமணத்திற்கு முன்பு உறுதி கூறினார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் தன் காதலியை கரம் பிடித்தார். தனது வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் சஞ்சய் தனது காதல் மனைவிக்கு நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி மனைவிக்கு பிறந்தநாள் பரிசளித்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் ஊடகத்திடம் பல விவரங்களைத் தெரிவித்தார்.
“திருமணத்துக்கு முன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக என் காதலிக்கு நிலாவில் இடம் வாங்கி பரிசளிக்க திட்டமிட்டேன்.
“இதுதொடர்பாக எனது நண்பர்களிடம் ஆலோசித்தேன். அவர்களின் உதவியுடன் லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் நிலாவில் நிலம் வாங்கினேன்.
“பின்னர் நிலம் வாங்கியதற்கான பதிவுச் சான்றை எனது மனைவியிடம் கொடுத்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்,” என்று அவர் கூறினார்.