நெல்லூர்: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவை கடந்த சனிக்கிழமை அதிகாலை சிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாநிலம் முழுவதும் சந்திரபாபு நாயுடுவின் கைதைக் கண்டித்து சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தெலுங்கு தேசக் கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டுக் கொளுத்தினர். மேலும் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைப்புப் போராட்டம் நடந்தது.
மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் உய்யூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 7 மண்டலங்களில் வரும் 15ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கடந்த 2018ஆம் ஆண்டு, திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 371 கோடி கைமாறியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவை நந்தியாலம் பகுதியில் இருந்து அமராவதி வரை தொடர்ந்து 8 மணி நேரம் காவல்துறையினர் காரில் அழைத்து சென்றனர். வழிநெடுகிலும் தெலுங்கு தேசம் கட்சியினர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை அதிகாலை முதலே ஆந்திராவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை காவல்துறையினர் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
“இது ரூ. 550 கோடி ஊழல். அரசுக்கு ரூ.371 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. போலி விலைப்பட்டியல் மூலம் போலி நிறுவனங்களுக்கு நிதி திருப்பி விடப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளி சந்திரபாபு நாயுடு. அதில் நடந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் அவருக்குத் தெரியும். இந்த வழக்கில் முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி ED மற்றும் GST அமைப்புகளும் விசாரணை செய்துள்ளன ” என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆந்திர சிஐடி காவல்துறை தலைவர் சஞ்சய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமை காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி மாநிலக் குற்றப் புலனாய்வு துறை தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் காவல்துறையினர் விழிப்பு நிலையில் உள்ளனர். அதன் அடிப்படையில், நெல்லூர் மாவட்டம், கிழக்குக் கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .