பெங்களூரு: தாய்லாந்தின் பேங்காக் நகரிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்த இளம் பெண்ணின் பைகளைச் சோதனை செய்த அதிகாரிகள் அதில் ஏராளமான பாம்புக் குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சோதனை நடந்துகொண்டிருக்கும்போது அந்த பெண் தப்பியோடியதால் அவை கடத்திவரப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
இந்நிலையில் அந்த பெண்ணின் பையை முழுமையாக சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அதிலிருந்து 72 பாம்புக் குட்டிகள், 3 சிலந்திக் குரங்குகள், மூன்று கபுச்சின் குரங்குகளைக் கைப்பற்றினர்.
பையில் வைத்து கடத்தி கொண்டுவரப்பட்டதால் சிலந்திக் குரங்குகளும் கபுச்சின் குரங்குளும் உயிரிழந்த நிலையில் பாம்புக் குட்டிகளை மீட்ட காவல்துறை அவற்றை மீண்டும் பேங்காக்கிற்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.
தப்பி ஓடிய இளம் பெண் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை அதிகாரிகள், அவர் இதுவரை நான்குமுறை சென்னை விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ளதாகவும் இப்போது முதல் முறையாக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண் வனவிலங்கு கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்பதால் அவரைப் பிடிக்க அதிகாரிகள் வலை வீசி உள்ளனர்.