புதுடில்லி: பிறப்புச் சான்றிதழை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
கல்வி நிலைய சேர்க்கை, திருமணப் பதிவு, அரசு பணி சேர்க்கை உள்ளிட்டவற்றுக்கு பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தலாம். மேலும் ஓட்டுநர் உரிமம் பெறவும், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு, ஆதார் எண் பதிவு முதலியவற்றுக்கும் ஒரே ஆவணமாக பிறப்புச் சான்றிதழை பயன்படுத்த முடியும்.
பிறப்புச் சான்றிதழை ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கும் புதிய மசோதா கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. பிறப்பு, இறப்பு பதிவுத் திருத்தச்சட்டம்(2023) அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஒருவரது, பிறந்த தேதி, பிறந்த இடத்தை உறுதிப்படுத்த ஒரே ஆவணமாக பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தலாம்.
பிறப்பு, இறப்பு பதிவுகளுக்கு தேசிய மற்றும் மாநில அளவில் தகவல் தளத்தை உருவாக்க இச்சட்டத் திருத்தம் வகைசெய்கிறது. இதன் மூலம், பொதுச் சேவைகள், சமூக நலன்கள், மின்னிலக்கப் பதிவு ஆகியவற்றை, வெளிப்படையாகவும், செம்மையாகவும் அமல்படுத்துவதை உறுதி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.