புதுடெல்லி: இந்தியாவின் நாடாளுமன்றம் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றியது. இதற்கு பல தரப்பினரும் பிரதமர் மோடியைப் பாராட்டி வருகிறார்கள்.
அந்த மசோதா கீழவை, மேலவை இரண்டிலும் வெற்றிகரமான முறையில் நிறைவேறியதைக் குறிக்கும் வகையில் பாஜகவைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடிக்கு இடைவிடாமல் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
வியாழக்கிழமை புதுடெல்லியில் மோடியுடன் சேர்ந்து அவர்கள் படமெடுத்துக் கொண்டார்கள்.
பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருகை அளித்தார்.
அப்போது பாஜக மகளிர் அணி சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பலரும் மோடி வாழ்க என்று உரக்கக் குரல் கொடுத்தனர்.
அப்போது தமிழகத்தைச் சேர்ந்த எம்எல்ஏவும் பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவியாகவும் உள்ள வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற முயன்றார்.
அதைக் கண்டு திடுக்கிட்ட பிரதமர் மோடி, பின்புறமாக நகர்ந்து கொண்டார்.
‘‘என்ன இது காலில் விழுவது, அப்படியெல்லாம் செய்யக்கூடாது. காலில் விழக்கூடாது,’’ என்று வானதியை செல்லமாகக் கடிந்து கொண்டார்.