பாட்னா: பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் மாண்டனர். அவர்களின் வயது முறையே 65, 25.
மாலை 6 மணியளவில் நடந்த சம்பவத்தில் 12 மற்றும் 10 வயதான இரு குழந்தைகள் கடுமையாகக் காயமடைந்தனர்.
65 வயது மூதாட்டி கட்டட இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாண்டார். இளைய பெண்ணும் குழந்தைகளும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி 25 வயதுப் பெண் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த வீடு மிகவும் பழைமையானது என்றும் அந்த வட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் அதன் கூரை இடிந்திருக்கக்கூடும் என்றும் காவல்துறை கூறியது.