பெங்களூரு: நிலவில் சூரிய சக்தி இல்லாமல் உறக்கத்தில் இருக்கும் ‘ரோவர்’ ஊர்தி மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்புள்ளது. ஆனால் எப்போது என கணிக்க முடியாது என்று இஸ்ரோ எனும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் சூரிய சக்தி மூலம் இயங்குகின்றன.
அவை, தரையிறங்கிய 14 நாள்களுக்கு தனது பணிகளை திட்டமிட்டபடி செய்து தகவல்களை இஸ்ரோவுக்கு அனுப்பி வருகிறது.
ஆனால் நிலவில் இரவு நேரத்தில் சூரிய சக்தியின்றி லேண்டர், ரோவர் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
தற்போது பகல்பொழுது ஆரம்பித்துள்ளதால் அவற்றை உறக்க நிலையில் இருந்து விழிக்கச் செய்யும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவரான சோம்நாத், “லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. முழு சந்திர நாள் வரை நாம் காத்திருக்க வேண்டும். அந்த காலத்தில்தான் சூரிய ஒளி முழுவதும் தொடர்ந்து இருக்கும், வெப்பநிலை உயரும் அளவுக்கு சூரிய ஒளி இருக்கும். இரண்டும் 14வது நாளில்கூட எழுந்திருக்கலாம். அது, எப்போது நடக்கும் என்பது கணிக்க முடியாது,” என்றார்.
“ஏற்கெனவே நாங்கள் செய்த பல சோதனைகள் எங்களுக்கு தரவுகளை வழங்கியுள்ளன, ஆனால் அது காலப்போக்கில் மாறக்கூடும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இருந்த இந்திய தேசியச் சின்னம் மற்றும் இஸ்ரோ சின்னம் நிலவில் தெளிவாக பதிவாகாததற்கு இஸ்ரோ அறிவியல் அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
“இது ஒரு நல்ல அறிகுறி. தென் துருவப் பகுதியில் உள்ள நிலவு மண்ணின் பண்புகள் பற்றிய புதிய புரிதலை இது தருகிறது. இது, எதிர்காலப் பயணங்களுக்கு பேருதவியாக இருக்கும்,” என்று இஸ்ரோ கூறியுள்ளது.