ராஜமுந்திரி: சிறை வைக்கப்பட்டிருக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் சிறையில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டனர்.
திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சிஐடி காவல்துறையினர் கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர்.
ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள சந்திர பாபு நாயுடுவுக்கு, கடந்த 22ஆம் தேதி வரை விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு சார்பில் தொடரப்பட்ட ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனால், நேற்று உச்ச நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பில் பிணை கேட்டு மனு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 நாட்கள் வரை சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரணை நடத்த விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் சிஐடி காவல்துறை மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம், இரண்டு நாட்கள் வரை சந்திரபாபு நாயுடுவை அவர் வைக்கப்பட்டுள்ள சிறையிலேயே மிகவும் கண்ணியமான முறையில் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
அதன்படி, சனிக்கிழமை காலை சந்திரபாபு நாயுடுவின் வழக்கறிஞர் தும்மலபாடி ஸ்ரீநிவாஸ் முன்னிலையில், சிஐடி டிஎஸ்பி தனஞ்செயுடு தலைமையில், 12 பேர் கொண்ட சிஐடி குழுவினர் அவரிடம் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடத்தினர்.
சனிக்கிழமை 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.