காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் வஸ்தாதி பகுதியில் உள்ள 40 ஆண்டு பழமையான பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
தினமும் ஏராளமான வாகனங்கள் பயணம் செய்ய உதவி வந்த அந்த பாலம் இடிந்து விழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை பாலம் இரு துண்டாக உடைந்து ஆற்றில் விழுந்தது.
அப்போது அதில் சில வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன.
பாலம் உடைந்ததில் குப்பை லாரி ஒன்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் ஆற்றில் விழுந்தன.
சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.
படகு மூலம் நீருக்குள் விழுந்தவர்களை அவர்கள் மீட்டனர்.
விரைவாக செயல்பட்டதுடன் காவல்துறைக்கும் மீட்புப் படை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
பாலம் இடிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட 10 பேர் ஆற்றில் விழுந்ததாகவும் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.