புதுடெல்லி: வெளிநாடுகளில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகள் 19 பேரின் சொத்துகள் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்படவிருக்கிறது. இது குறித்து இந்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
கடந்த ஜூன் 18ஆம் தேதி கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்துக்கும் இந்திய உளவுத் துறைக்கும் தொடர்பு இருக்கிறது என்று கனடா குற்றம் சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்தது.
இதற்கிடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்குச் சொந்தமான பஞ்சாப் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள சொத்துகள், சீக்ஸ் ஃபார் ஜஸ்ட்டிஸ் அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங்குக்கு சொந்தமான சண்டிகர் வீடு ஆகியவற்றை இந்தியாவின் என்ஐஏ அமைப்பு சனிக்கிழமை முடக்கியது.
மேலும் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் 19 காலிஸ்தான் தீவிரவாதிகளின் சொத்துகளையும் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பரம்ஜித் சிங், குல்வந்த் சிங், சுக்பால் சிங், சரப்ஜித் சிங், குர்மீத் சிங், குருப்ரீத் சிங், துபிந்தர் ஜீத் பாகிஸ்தானில் உள்ள வத்வா சிங், அமெரிக்காவில் உள்ள ஜே தாலிவால், ஹர்பிரீத் சிங், ஹர்ஜப் சிங், அமர்தீப் சிங், ஹிம்மத் சிங் பாகிஸ்தானில் உள்ள வத்வா சிங் பாபர். ரஞ்சித் சிங், துபாயில் உள்ள ஜஸ்மீத் சிங், ஆஸ்திரேலியாவில் உள்ள குர்ஜந்த் சிங், கனடாவில் உள்ள லக்பிர் சிங், ஜதிந்தர் சிங் ஆகியோர் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் இந்தியாவில் உள்ள அவர்களது சொத்துகளை தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே இந்தியா உடனான உறவு கனடாவுக்கு முக்கியம் என்று கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார்.
“குடிமக்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதே சமயத்தில் ஒரு முழுமையான விசாரணையை நடத்தி உண்மையைக் கண்டறிய எங்களுக்கு பொறுப்பு உள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.