காஸியாபாத்: ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட சி-295 ரக நவீன விமானம் கடந்த 5 நாள்களுக்கு முன்பு காஸியாபாத்திலுள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்துக்கு வந்து சேர்ந்தது.
இதையடுத்து முறைப்படி விமானப் படையில் இந்த விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் நடைபெற்றது.
இதற்காக விமானப்படைத் தளத்தில் வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி, மூத்த அதிகாரிகள், ஏர் பஸ் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விமானம் தற்போது விமானப்படையின் 11வது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பழமையான விமானப் படைப் பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த பிரிவின் விமானப் படைத் தளம் வதோதராவில் அமைந்துள்ளது.
இதேபோன்ற மேலும் 16 விமானங்களை ஏர் பஸ் நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்குள் தயாரித்து வழங்கும். மேலும், 40 விமானங்கள் இந்தியாவில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (டிஏஎஸ்எல்) நிறுவனமும், ஏர் பஸ் நிறுவனமும் இணைந்து அமைக்கவுள்ள ஆலையில் தயாராகும்.
இந்த விமானத்தை குறுகிய தூர ஓடுபாதையில் தரையிறக்கவும், மேலெழுப்பவும் முடியும். சி-295 ரக விமானத்தைப் பெற்றுள்ள இந்தியா, ஏற்கெனவே இதுபோன்ற விமானங்களைக் கொண்டுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், உக்ரேன், பிரேசில், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளது.